ஹம்பர்க்: பிளாய்ட் மேவெதர் - மெக்கிரகார் இடையேயான குத்துச்சண்டை போட்டி கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்டது.
போட்டியில் மேவெதர், ரூ.1,400 கோடி ரூபாய் பரிசு பெற்றதும், கிட்டத்தட்ட அதே அளவுக்கு மெக்கிரகாரும் சம்பாதித்தது தனி விஷயம்.
இந்த நேரத்தில், ஜெர்மனியில் துவங்கிய குத்துச்சண்டை உலக சாம்பியன் போட்டி, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 10 பிரிவுகளில், பதக்கம் வெல்வதற்கு, 20 நாடுகளைச் சேர்ந்த, 40 வீரர்கள் தயாராக உள்ளனர்.
அரை இறுதிப் போட்டிகள் இன்று இரவு நடக்க உள்ளன. பதக்க வேட்டையில் உள்ள, 40 வீரர்களில், ஏழு பேர் கியூபாவைச் சேர்ந்தவர்கள். கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த, தலா 6 பேர் களத்தில் உள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று வீரர்களும் மூன்று பதக்கங்களை வெல்லும் வெறியுடன் உள்ளனர்.
இந்த உலக சாம்பியன் போட்டிக்கு, வைல்ட்கார்ட்' தகுதிச் சுற்று மூலம் களமிறங்கிய, இந்தியாவின் கவுரவ் பிதுரி, இந்தியாவுக்கு தங்கம் வென்றுத் தர வேண்டும் என்ற, பதக்க பசியில் உள்ளார்.
பாந்தம் வெயிட் (56 கிலோ) பிரிவில், அரை இறுதியில் களமிறங்கும் இந்தியாவின் கடைசி பதக்க நம்பிக்கையான கவுரவ் பிதுரி, அமெரிக்காவின் டியூக் ராகனைச் சந்திக்கிறார். மற்றொரு அரை இறுதியில், கஜகஸ்தானின் கைராட் யெராலீவ், இங்கிலாந்தின் பீட்டர் மெக்கிரெயிலுடன் மோதுகிறார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் அரை இறுதிக்கு நுழைந்துள்ள நான்காவது இந்திய வீரர் கவுரவ் பிதுரி, வந்தால் தங்கத்துடன்தான் வருவேன் என்று பிடிவாதமாக உள்ளார்.
இதற்கு முன், 2009ல் விஜேந்தர் சிங், 2011ல் விகாஸ் கிருஷ்ணன், 2015ல் சிவ தாப்பா ஆகியோர் அரை இறுதி வரை முன்னேறி, வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளனர்.
தற்போது கவுரவ் பிதுரி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இருந்தாலும், தங்கமே எனது இலக்கு என்று பஞ்ச் கொடுக்கிறார். தங்கம் வெல்ல வாழ்த்துவோம்.