லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 371 ரன்கள் இலக்கை நிர்ணயித்தும், கடைசி நாளில் இங்கிலாந்து அணி வென்றது. இதனால் பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சுப்மன் கில் கேப்டன்ஷி சரியில்லை என்று பலரும் சாடியுள்ளனர்.
மேலும் சிலர், இந்திய வீரர்கள் பந்துவீச்சை குறை கூறியுள்ளனர். முதல் இன்னிங்ஸ் மற்றும் 2வது இன்னிங்சில் கீழ்வரிசை வீரர்கள் கொஞ்சம் நிலைத்து நின்று இருந்தால், இந்தப் போட்டியில் குறைந்தபட்சம் இந்திய அணி டிரா செய்திருக்கலாம். இந்த நிலையில் தோல்விக்கான காரணத்தை சொன்ன கம்பீர், யாரையும் குறை சொல்லப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "நான் இங்கு உட்கார்ந்து, இவர் சரியாக பந்து வீசவில்லை. அவர் நன்றாக பங்கு வீசினார் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். வீரர்கள் தொடர்ந்து ஒரே மாதிரி சிறப்பாக செயல்பட வேண்டும். கிரிக்கெட்டில் கன்சிஷ்டன்சி அதான் முக்கியம். நிச்சயமாக இந்த வீரர்கள் கற்றுக் கொள்வார்கள். சில சமயம் நமது வீரர்கள் தோல்வியை தழுவுவார்கள். இது நிச்சயம் ஏமாற்றத்தை கொடுத்தாலும் பரவாயில்லை என நினைக்கின்றேன். உங்களைவிட வீரர்கள் தான் தற்போது மிகுந்த ஏமாற்றத்திற்கு இருப்பார்கள்."
"ஏனென்றால் வெற்றி பெற வேண்டிய வாய்ப்பு இருந்தது என்று அவர்களுக்கு தெரியும். நாங்கள் 570 அல்லது 580 ரன்கள் அடித்திருந்தால் நாம் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி இருப்போம். வலைப்பயிற்சியில் அவர்கள் நல்ல முறையில் தான் உழைக்கிறார்கள். அவர்கள் சரியாக பயிற்சி எடுக்கவில்லை என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். சில சமயம் இதுபோன்ற தோல்வி நடக்கலாம். சில நல்ல பேட்ஸ்மேன்கள் கூட இது போன்ற ஆடுகளத்தில் ரன் எடுக்காமல் போகலாம். எனவே இதிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்வார்கள்."
"இனி அடுத்தடுத்த போட்டிகளில் நமது கீழ் வரிசையில் வீரர்களும் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்புகிறேன். இதனால் தான் நாம் போட்டியில் தோற்றோம். அதுதான் உண்மை. மேலும் சில தருணங்களில் நாம் சரியாக செயல்பட்டு இருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் நான் உட்கார்ந்து கொண்டு எங்கள் கீழ் வரிசையில் வீரர்கள் சரியாக விளையாடவில்லை. கடைசி நான்கு வீரர்கள் ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் தான் தோற்றோம் என்றெல்லாம் நாங்கள் சொல்ல மாட்டோம்.
நாங்கள் தோல்வி அடைந்தால் ஒன்றாக தோற்போம். வெற்றி பெற்றால் ஒருங்கிணைந்து வெற்றி பெறுவோம்.சுப்மன் கில்லுக்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டி. இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்குவது என்பது மிகப்பெரிய கௌரவம். இதை அவர் ஏற்கனவே சொல்லிவிட்டார். ஏனென்றால் இப்படி ஒரு கௌரவம் பலருக்கும் கிடைக்காது. அவருடைய கேப்டன்சி சிறப்பாக இருந்தது. அதைவிட முதலில் அவர் நன்றாக பேட்டிங் செய்தார். முதல் போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்றிருப்பதால் அவர் கொஞ்சம் பதற்றம் அடைந்து இருக்கலாம்."
'ஆனால் அவர் சதம் அடித்திருக்கின்றார். ஒரு வெற்றிகரமான கேப்டனாக வர வேண்டிய அனைத்து தகுதியும் அவருக்கு இருக்கின்றது. எனவே அவருக்கும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் தற்போது தான் அவர் முதல் முறையாக கேப்டனாக இருக்கின்றார். எனவே நிச்சயம் அவர் வளர்ச்சி அடைவார். இங்கிலாந்து போன்ற மண்ணில் அணியை வழிநடத்துவது என்பது சிரமமான விஷயம்.இது வீரர்களை ஆழ்கடலில் தள்ளி விடுவதற்கு சமம். நிச்சயம். அவர் ஒரு சிறந்த கேப்டனாக வெளியே வருவார்" என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.