
கோலியின் கம்பேக்
2007ம் ஆண்டுக்கு பிறகு 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல காத்திருக்கும் இந்திய அணி இந்த முறையாவது சாதிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். அதற்கேற்றார் போல இந்தியாவின் பேட்டிங் ஆர்டரும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பி ரன் வேட்டை நடத்தி வருகிறார். இந்த தொடரில் கோலியின் ஆட்டத்தை வைத்து தான் இந்தியாவின் கோப்பை கனவு நிறைவேறவுள்ளது.

கம்பீர் தந்த அட்வைஸ்
இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையை விராட் கோலி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என கவுதம் கம்பீர் அட்வைஸ் கூறியுள்ளார். அதில் அவர், இந்த தொடரில் விராட் கோலி ரன் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமே தவிர, சாதனைகளை தகர்ப்பதை நோக்கமாக வைத்திருக்க கூடாது. ஏனென்றால் எத்தனை ரன்களை அடித்தோம், என்ன சாதனை படைத்தோம் என்பது இதுபோன்ற தொடர்களில் பெரிதல்ல.

வீரரின் பெருமை அது
அதாவது ஒரு போட்டியில் விராட் கோலி 50, 100 ரன்கள் அடிப்பதை விட, அணிக்கு தேவையான நேரத்தில் அடிக்கும் 30 - 40 ரன்களே மிகவும் உதவியாக இருக்கும். என்னைப்பொறுத்தவரையில் ஒரு வீரர் எத்தனை ரன்கள் அடித்திருந்தாலும், உலகக்கோப்பையை வென்றிருந்தால் அதுவே அவரது மிகப்பெரிய பெருமையாக இருக்கும் என கம்பீர் கூறியுள்ளார். இதனை கேட்ட கோலியின் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். அவர் எப்போதுமே சுயநலமாக ஆடியதில்லை என்றும், அணிக்கு தேவையான ரன்களை தான் அடிக்கிறார் என்றும் பதில் கொடுத்து வருகின்றனர்.

கோலியின் பணி
இந்திய அணி ஆக்ரோஷ முறையை கடைபிடித்து வரும் நிலையில் கோலி மட்டும் தனது பழைய ஃபார்மிலேயே இருக்கிறார். அதாவது ஒருபுறம் வீரர்கள் அதிரடி காட்ட, மறுமுனையில் கோலி தூண் போல கடைசி வரை நின்று பார்ட்னர்ஷிப் கொடுப்பார். அதே சமயம் போட்டியை முடித்துக்கொடுக்க வேண்டிய பணியையும் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications