மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது ஆக்ரோஷமான சுபாவத்திற்குப் பெயர் போனவர். சமீபத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி உரிமையாளர் பார்த் ஜிண்டாலை மறைமுகமாகத் தாக்கிப் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், கம்பீரின் நண்பரும் முன்னாள் வீரருமான ஆகாஷ் சோப்ரா அவருக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "தேவையில்லாமல் அனைவரிடமும் சண்டையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்" என்று அதன் பின்விளைவுகளை சுட்டிக்காட்டி அவர் அறிவுரை வழங்கி உள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றபின், கம்பீர் ஐபிஎல் உரிமையாளரான பார்த் ஜிண்டாலை விமர்சித்துப் பேசியிருந்தார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா டெஸ்ட் தொடரை இழந்தபோது, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால், "இந்திய டெஸ்ட் அணிக்குத் தனி பயிற்சியாளர் தேவை" என்று ட்வீட் செய்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஒருநாள் தொடரை வென்ற பிறகு பேசிய கம்பீர், "நாங்கள் எப்படி அவர்கள் (ஐபிஎல் உரிமையாளர்கள்) வேலையில் தலையிடுவதில்லையோ, அதேபோல அவர்களும் எங்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது. அவரவர் எல்லைக்குள் இருப்பது நல்லது," என்று காட்டமாகப் பதிலளித்திருந்தார்.
கம்பீரின் இந்த நடவடிக்கை குறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, கம்பீரை எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார். "கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் எதையும் மறைக்காமல் மனதிலுள்ளதை அப்படியே பேசுவார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அவருக்கு நான் ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இப்படித் தனிப்பட்ட நபர்களைத் தாக்கிப் பேசும்போது, அல்லது ஆக்ரோஷமாகச் சண்டையிடும்போது, மக்கள் உங்கள் வீழ்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கத் தொடங்குவார்கள்.
நீங்கள் எப்போது தோற்பீர்கள், உங்களை எப்போது விமர்சிக்கலாம் என்று ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கும். நீங்களே அதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறீர்கள்" என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "கம்பீர் ஒரு தேசப்பற்றாளர், அணியின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பார்த் ஜிண்டாலுக்குப் பதிலடி கொடுத்தது கொஞ்சம் தேவையற்றது என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை அவர்களுக்குள் வேறு ஏதேனும் முன்விரோதம் இருந்திருக்கலாம். அதனால்தான் கம்பீர் அப்படிப் பேசியிருப்பார்.
இருந்தாலும், எல்லாரிடமும் சண்டை போடுவது நல்லதல்ல. யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும், எதிரிகளை வளர்த்துக்கொள்ளக் கூடாது" என்று தனது நண்பருக்குப் பக்குவமாக எடுத்துரைத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
ஏற்கனவே டெஸ்ட் தொடர் தோல்வியால் விமர்சனத்தில் இருக்கும் கம்பீர், ஐபிஎல் உரிமையாளர்களுடன் மோதுவது அவரது பதவிக்கே ஆபத்தாக முடியும் என்பதே சோப்ராவின் கருத்தாக உள்ளது.