கொழும்பு : பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியை வென்றால் மட்டும் போதும் என்ற நிலைப்பாட்டில் ரசிகர்கள் இருப்பது மிகவும் தவறு என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் சமீபகாலமாக இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கு ஊடகங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சிலருக்கு பாகிஸ்தான் போட்டியை வென்றால் மட்டும் போதும், உலகக்கோப்பை கூடத் தேவையில்லை என்ற எண்ணத்தில் சிலர் இருப்பதை காண முடிகிறது என்று கம்பீர் சாடியுள்ளார்.தாங்கள் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது பாகிஸ்தான் உடன் மோதும் போது அது எங்களுக்கு ஒரு போட்டியாக தான் இருக்குமே தவிர அவர்களை வீழ்த்துவது தான் எங்களுடைய குறிக்கோள் என்பதெல்லாம் இருக்காது என்று தெரிவித்தார்.
தாங்கள் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் வரும் போது பாகிஸ்தான் எங்களுடைய வெற்றி பயணத்தில் ஒரு தடையாக தான் இருக்குமே தவிர அதுதான் எங்களுடைய பயணத்தின் இறுதி இலக்கு கிடையாது என்றும் கம்பிர் கூறினார். 2007 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பை தொடரில் மற்ற அணிகளை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெற்றோமோ அதே போல் தான் பாகிஸ்தானையும் நாங்கள் எதிர்கொண்டு வென்றோம் என்று கம்பீர் தெரிவித்தார்.
அதே எண்ணத்தில் தான் தற்போதும் இந்திய அணி வீரர்கள் இருக்க வேண்டும் என்று கூறினார். கடந்த டி20 உலக கோப்பையின் போது பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதை சுட்டிக்காட்டிய கம்பீர் அந்தப் போட்டிக்குப் பிறகு உலக கோப்பையை வென்றது போல் இந்தியா உணர்ந்ததாகவும்,அதனால் மற்ற போட்டிகள் பெரியதாக தெரியவில்லை என்றும் கம்பீர் கூறினார்.
உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளை இந்தியா தவறவிட்டதாகவும் கம்பீர் சுட்டி காட்டினார். இதனால் பாகிஸ்தான் போட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அதனையும் ஒரு ஆட்டமாக பாருங்கள் என ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு அறிவுரை கூறியுள்ள கம்பீர் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும் கம்பீர் கூறினார். இந்த அறிவுரையை தான் பாகிஸ்தான் வீரர்களுக்கும் சேர்த்து தான் சொல்கிறேன் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.