கம்பீர் - அகர்கர் மோதலால் நாசமாகும் இந்திய அணி.. தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை.. பிசிசிஐ கவனிக்குமா?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருவதாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்த மோதல் போக்கு அணியின் சூழலையும், வீரர்களின் தன்னம்பிக்கையையும் கடுமையாக பாதிப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
இதே போன்ற ஒரு தகவலை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆகியோரும் பெசஈ இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இது இந்திய கிரிக்கெட்டில் புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து தினேஷ் கார்த்திக் மிக வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அகர்கர் மற்றும் கம்பீர் இடையே இருக்கும் இந்த மோதலுக்கு அவர்களின் வெவ்வேறான அணுகுமுறையே முக்கியக் காரணம் என்று தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டார். தேர்வுக் குழு தலைவர் அகர்கர் இந்திய அணியின் எதிர்காலத்திற்கான நீண்ட கால திட்டங்களை வைத்துள்ளார். ஆனால் பயிற்சியாளர் கம்பீரோ தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.
இந்த இருவேறு சிந்தனைகளால் அணியைத் தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இது சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இந்திய அணி சந்தித்த தொடர் தோல்விகள் மூலம் வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்காக அனுபவ வீரர் சஞ்சு சாம்சனை நீக்கியது, வைபவ்வுக்கும் சரியான வாய்ப்புகள் வழங்காமல் 3 போட்டிகளில் விளையாட வைத்து, பின்னர் 5-வது போட்டியில் நீக்கியது போன்ற குழப்பங்கள் அரங்கேறின.
இத்தகைய குழப்பங்களால் வீரர்களிடையே தங்களது இடம் குறித்த பாதுகாப்பற்ற உணர்வு அதிகரித்துள்ளதாக தினேஷ் கார்த்திக் கவலை தெரிவித்துள்ளார். இந்திய அணியில் திறமையான வீரர்கள் பலர் வெளியில் காத்திருப்பதால், 2 போட்டிகளில் சொதப்பினால் கூட தங்களது இடம் பறிபோய்விடுமோ என்ற பயம் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலை பிசிசிஐ உடனடியாகக் கவனித்துச் சரிசெய்ய வேண்டும் என்று கார்த்திக் கூறியுள்ளார்.
இதேபோல், சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்குப் போதிய வாய்ப்புகள் வழங்கப்படாததால் அவர்கள் தங்களது நம்பிக்கையை இழந்துள்ளதாக அஸ்வினும், கைஃபும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications

