ஒரே ஒரு விக்கெட்டை வைத்துக் கொண்டு பேட்டிங்.. டிக்ளேர் செய்யாத கம்பீர், கில்.. விளாசிய கணேஷ்
காலே: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் தற்காப்பு ஆட்ட வியூகத்தை முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தோடா கணேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். காலே மைதானத்தில் மழை அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்தபோது இந்திய அணி 3-வது நாளிலும் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்போட்டியின் முதல் இரண்டு நாட்களில் மழை காரணமாக 64 ஓவர்கள் ஆட்டம் வீணானது. மேலும், மீதமுள்ள நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை கூறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற, இந்தியா விளையாடவுள்ள 9 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்திய அணி வேகமாக ஆட்டத்தை நகர்த்தாமல் தற்காப்பு ஆட்டத்தை கையாள்வது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட தோடா கணேஷ், "இரண்டு கடைசி வரிசை பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டு 3-வது நாள் காலையில் ஏன் பேட்டிங் செய்ய வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். நேற்று துருவ் ஜூரல் ஆட்டமிழந்த போதே இந்திய அணி டிக்ளேர் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மழை பெய்து ஆட்டம் டிரா ஆனால் அது இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்பை பாதிக்கும். எனவே, இந்திய அணி விரைவாக பந்து வீச்சை தொடங்கி இருக்க வேண்டும் என்பதே கணேஷின் வாதமாக உள்ளது.
மூன்றாம் நாள் காலை ஆட்டம் தொடங்கிய 4 பந்துகளிலேயே பிரசித் கிருஷ்ணா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குல்தீப் யாதவ் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து விளையாடிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர். முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே நிஷான் பெர்னாண்டோ ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தினேஷ் சண்டிமாலையும் 4 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து அறிமுக வீரர் மானவ் சுதார் அசத்தினார். இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications
