லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உலகளாவிய ஆலோசகராக இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தொடர்வார் என்று அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஐபிஎல் தொடர் முடிவடைந்ததோடு லக்னோ அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஆண்டி பிளவரின் ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து கவுதம் கம்பீரின் உற்ற நண்பரான ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜஸ்டின் லாங்கர் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிக்கு பயிற்சியளிக்க உள்ளார்.

இதன்பின் லக்னோ அணியில் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக பிரவீன் தாம்பே, துணைப் பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் விஜய் தாஹியா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதில் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக ஜஸ்டின் லாங்கருடன் பணியாற்றி இருக்கிறார். இதனிடையே லக்னோ அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து கம்பீர் விலக உள்ளதாக தகவல் வெளியானது.
லக்னோ அணியில் இருந்து விலகி கேகேஆர் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்பட்டது. அதேபோல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக் சபா தேர்தல் பணிகள் காரணமாகவே கவுதம் கம்பீர் விலக முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. ஏனென்றால் லோக் சபா தேர்தல் நடத்தப்பட்டால், ஐபிஎல் தொடர் வெளிநாட்டிற்கு மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளது.
வெளிநாட்டில் நடைபெற்றால் கவுதம் கம்பீரால் தேர்வு பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது. இதன் காரணமாக கம்பீர் விலக முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் லக்னோ அணி தரப்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், லக்னோ அணியின் உலகளாவிய ஆலோசகராக கம்பீர் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கம்பீர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பாட்டுள்ளது. இதன் காரணமாக கவுதம் கம்பீர் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக் சபா பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சர்ச்சைகளுக்கு பெயர்போன கவுதம் கம்பீர், அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.