மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த மாதம் அவர் இதற்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்று இருந்தார். அதன் முடிவில் அவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்து இருக்கிறது பிசிசிஐ.
இந்திய அணி சமீபத்தில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்த மாபெரும் வெற்றியுடன் முந்தைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியில் இருந்து விடை பெற்றார். அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய முக்கிய தொடர்கள் இருக்கும் நிலையில் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2012 மற்றும் 2014 ஐபிஎல் கோப்பை வெற்றி என கவுதம் கம்பீர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்த ஒருவர். ஆக்ரோஷமான குணம் கொண்டவர். தனது அணிக்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர். அந்த வகையில் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர், அந்த அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றினார். தற்போது அந்த பதவியில் இருந்து விலகிய அவர், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள பதிவில், "திரு.கவுதம் கம்பீர் அவர்களை இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தற்கால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. கவுதம் இந்த மாறிவரும் சூழலை அருகில் இருந்து பார்த்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளை சகித்துக்கொண்டு, பல்வேறு பாத்திரங்களில் சிறந்து விளங்கியதால், இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கவுதம் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன். இந்திய அணி பற்றிய அவரது தெளிவான பார்வை, அவரது பரந்த அனுபவத்துடன் இணைந்து, இந்த உற்சாகமான மற்றும் மிகவும் விரும்பப்படும் பயிற்சியாளர் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவரை முழுமையாக நிலைநிறுத்துகிறது." என்று கூறி இருக்கிறார்.