மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டு இருக்கும் சம்பவத்தில் ஒரு விதிமீறல் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பொதுவாக ஒரு அணியின் தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படும்போது, அந்த அணியில் உள்ள கேப்டன் மற்றும் மற்ற சீனியர் வீரர்களிடம் கருத்து கேட்கப்படும்.
அதில் சீனியர் வீரர்கள் கேப்டன்கள் என்ன சொல்கிறார்களோ அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இருந்த சூழலில் விராட் கோலி பயிற்சியாளராக இருந்த கம்பீருக்கு எதிராக கடிதம் எழுதியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதிலிருந்து இந்த பயிற்சியாளர் உங்களுக்கு வேண்டுமா? அவர்களுடன் பணியாற்றுவதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்று நியமனத்திற்கு முன்பு பிசிசிஐ கேட்டு வருகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கம்பீர் பயிற்சியாளராக வரப்போகிறார் என்று செய்திகள் வெளியானதுமே பல ரசிகர்கள் அவருக்கும் விராட் கோலிக்கும் இடையே நல்ல உறவு இல்லையே?
இது எப்படி சாத்தியமாகும் என்று தான் கேட்டார்கள். ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் விராட் கோலியும் கம்பீரும் களத்தில் மோதிக்கொண்ட சம்பவம் இதற்கு மிகப்பெரிய சான்று. இந்த நிலையில் விராட் கோலியிடம் பிசிசிஐ கம்பீர் நியமனம் தொடர்பாக எந்த கருத்தும் கேட்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரராக விராட் கோலி இன்னும் இருக்கின்றார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடப் போகிறார். இந்த சூழலில் கம்பீருடன் அவர் நல்ல நட்பில் இருந்தால் மட்டுமே அவரால் தொடர்ந்து விளையாட முடியும். ஆனால் இது குறித்து எல்லாம் பிசிசிஐ கவலைப்படவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, போதிய நேரம் இல்லாததன் காரணமாக கோலியிடம் கருத்து கேட்கவில்லை என்றும், இனி எதிர்காலத்தில் ஜூனியர் வீரர்கள் தான் அணியில் இடம்பெறப் போகிறார்கள் என்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஆனால் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் வரப்போகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் கம்பீர் நியமனம் குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் மட்டும் பிசிசிஐ கருத்து கேட்டிருக்கிறது. இதுதான் தற்போது சர்ச்சையில் ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியாவிடம் கருத்து கேட்ட பிசிசிஐ விராட் கோலியிடம் ஏன் கேட்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப் போன்று ரோகித் சர்மா தொடர்ந்து டிராவிட் தான் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தி வந்தார். இதனால் ரோகித் சர்மாவுக்கும் கம்பீரின் வருகை பிடிக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.