மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு சேவாக் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். ஷேவாக்கும் கம்பீரும் டெல்லியை சேர்ந்தவர்கள். அது மட்டுமல்லாமல் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக நீண்ட காலம் இருந்தவர்கள்.
இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. இந்த நிலையில் கம்பீரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் லக்னோ போன்ற அணியின் மென்டராக பணிபுரிந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து சேவாக் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில், ஒரு பயிற்சியாளராக கம்பீருக்கு எந்த ஒரு பெரிய சவாலும் இல்லை என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்திய அணியில் இருப்பது தொழில் முறை கிரிக்கெட் வீரர்கள். அதுமட்டுமல்லாமல் தற்போது தான் டி20 உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று இருக்கிறார்கள்.
வீரர்களுக்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும். தங்களுடைய பொறுப்பு என்ன என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். அது மட்டும் இல்லாமல் கம்பீரின் வருகைக்கு பிறகு இன்னும் அதிகமான தெளிவு வீரர்களுக்கு கிடைக்கும். உன்னுடைய பணி இதுதான். நீ இதை செய்தால் இந்திய அணிக்கு இத்தகைய நன்மை கிடைக்கும் என்பதை எல்லாம் கம்பீர் அழகாக எடுத்துரைப்பார்.
கம்பிருக்கான சவால்கள் குறைவுதான். ஆனால் வீரர்களுக்கான சவால்கள் தான் அதிகம். தற்போது டி20 உலக கோப்பை வென்றிருப்பதால் சாம்பியன்ஸ் கோப்பை அல்லது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இது அனைத்தையும் வீரர்கள் தான் தாங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே எப்போதுமே பயிற்சியாளர்களை விட வீரர்கள் தான் அதிக சவால்கள் இருக்கும். கம்பீர் தற்போது பயிற்சியாளராக இருப்பதால் நிச்சயம் வீரர்களுக்கு துணையாக இருப்பார் என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் இறுதியில் இந்திய அணி இலங்கைக்கு மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் தொடர் என்பதால் அனைவரும் இந்த தொடரை எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
சூரிய குமார் யாதவ் தலைமையில் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் டி20 தொடரை வென்ற நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான ஒரு நாள் அணி இலங்கைக்கு எதிராக இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இந்தியா இழந்தது. இது கம்பிருக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது சேவாக் கம்பீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார். இந்திய அணி அடுத்ததாக வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.