மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்பட்டாலும், அவர் இன்னும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முடிவுகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நிலையை அடையவில்லை.
கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அணியின் முழு செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் நட்சத்திர கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் கம்பீர் பொறுப்பேற்றார். அவரது முதல் நடவடிக்கையாக, அனைத்து வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் கிடைக்கும்போது பங்கேற்க வேண்டும் மற்றும் பயணங்களின்போது குறிப்பிட்ட முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற 10-புள்ளி விதிமுறைகளை அறிமுகப்படுத்தினார்.
இரண்டாம் கட்டமாக, நீண்ட காலத்திற்கு நாட்டிற்கு சேவையாற்றக்கூடிய வீரர்களின் குழுவை உருவாக்குவதற்கு முயற்சித்தார்.
ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து படிப்படியாக விலக்குவதில் கம்பீர் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. ரோஹித் மே 7 அன்று டெஸ்ட் ஓய்வை அறிவித்தார், கோலி மே 12 அன்று இதே முடிவை எடுத்தார்.
இங்கிலாந்து பயணத்திற்கான இந்திய அணி தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு, கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியை உருவாக்கும் திட்டத்தை அவர்களுக்கு தெரிவித்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான உள்நாட்டு தொடர் தோல்வி மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பின்னடைவு மீண்டும் நிகழாமல் தடுக்க, கம்பீர் பிசிசிஐ-யிடம் முழு அதிகாரத்தை கோரியுள்ளார்.
சமீப ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கேப்டன்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 2005-ல் அப்போதைய பயிற்சியாளர் கிரெக் சாப்பல், சவுரவ் கங்குலியை அணியில் இருந்து நீக்கியது கடைசியாக கேப்டன் வெளியேற்றப்பட்ட சம்பவமாகும்.ரவி சாஸ்திரி-கோலி மற்றும் ராகுல் டிராவிட்-ரோஹித் ஆகியோர் சிறந்த பயிற்சியாளர்-கேப்டன் உறவை உருவாக்கி, நாட்டிற்கு வெற்றிகளை பெற்றுத் தந்தனர்.
ஆனால், கம்பீரின் அணுகுமுறை வேறுபட்டது.
கொள்கை வகுப்பது, அணி தேர்வு மற்றும் பிற அணி சார்ந்த விஷயங்களில் அவருக்கு கேப்டனுக்கு இணையான அதிகாரம் உள்ளது. ரோஹித், கோலி மற்றும் அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது அவர் முழு கட்டுப்பாட்டை எடுப்பார் என தெரிகிறது.
25 வயதான சுப்மன் கில், கம்பீருடன் எப்போதும் ஒத்த கருத்துடன் இருப்பார் என தெரிகிறது. ஜஸ்ப்ரீத் பும்ரா, கம்பீரின் முடிவுகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கக்கூடியவர் என்றாலும், அவரது பணிச்சுமை காரணமாக கேப்டன்ஷி பந்தயத்தில் இல்லை.