மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி 12 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு அடுத்த வாய்ப்பாக 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. வரும் ஜூன் மாதம் இந்த தொடர் நடைபெற உள்ளதால் இதற்காக இந்திய அணி தற்போதிலிருந்தே தயாராகும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பங்கேற்பதில்லை. இதனால் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கு சூரியகுமார் யாதவை கேப்டனாக தேர்வு செய்து இருக்கிறார்கள். மேலும் ஹர்திக் பாண்டியா தற்போது காயம் அடைந்துள்ளதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த டி20 உலக கோப்பைக்கு யார் புதிய கேப்டனாக வரவேண்டும் என்பது குறித்து கௌதம் கம்பீர் பரிந்துரை கொடுத்திருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். இதில் சந்தேகத்திற்கே இடமில்லை, கோலி, ரோஹித் ஆகிய இருவருமே டி20 உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும்.
அதிலும் முக்கியமாக நான் ரோகித் சர்மாவே டி20 உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். டி 20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்திருக்கிறார். ஆனால் ரோகித் சர்மாவை தான் நான் டி20 உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இந்த உலக கோப்பையில் பேட்டிங்கில் எப்படி விளையாட வேண்டும் என்று ரோகித் சர்மா அனைவருக்குமே காட்டி இருக்கிறார்.
ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டால் விராட் கோலியும் நிச்சயம் தானாகவே தேர்வாகி விடுவார். ரோகித் சர்மா இந்த டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என நினைத்தால், அவர் தான் கேப்டனாக தேர்வு செய்யப்பட வேண்டும். வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டும் அவர் விளையாட கூடாது என்று கம்பீர் கூறியுள்ளார்.அடுத்த டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டி முடிந்த ஒரு வாரத்தில் இந்த தொடர் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.