மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளர் ஆன கம்பி தங்களுக்குள் பருத்திவீரன் குணத்தை கொண்டு வந்து விட்டார் என தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். கம்பீர் தலைமையேற்ற பிறகு இந்திய அணி t20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தொடர்ந்து பல்வேறு இருதரப்பு தொடர்களை வென்றுள்ள இந்திய அணி தற்போது ஆசிய கோப்பையை ஒன்பதாவது முறையாக வென்று சாதித்து இருக்கிறது. இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி முக்கிய இடம் பிடித்துள்ள நிலையில், அவர் பயிற்சியாளர் கம்பீரை பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "கம்பீர் குறித்து நான் ஒன்றை சொல்ல வேண்டும் என்றால் எங்களுக்குள் பருத்தி வீரனின் மனநிலையை கொண்டு வந்து விட்டார். இதனால் நாங்கள் தோல்வியே அடையக் கூடாது என்ற ஒரு மனநிலையில் இருக்கின்றோம். களத்தில் ஒவ்வொரு முறையும் சிறந்த செயல்பாட்டை நாங்கள் கொடுக்க வேண்டும்."
"அதன் பிறகு என்ன நடந்ததோ, அது நடந்து விட்டது என்று கடந்துவிடுவோம். கம்பீர் அணியில் இருக்கும் போது சோம்பேறித்தனத்திற்கு அணியில் இடமே கிடையாது. களத்தில் மோசமாக செயல்பட கம்பீர் எப்போதுமே அனுமதிக்க மாட்டார். நான் என்னுடைய கம்பேக்கை தரும் போது கம்பீரும், கேப்டன் சூரிய குமாரும் என்னுடன் பேசினார்கள். அப்போது நாங்கள் உன்னை ஒரு விக்கெட் எடுக்கும் பவுலராக பார்க்கின்றோம் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள்."
"என்னுடைய வெற்றிக்கு நிச்சயம் நான் அந்த இரண்டு பேரையும் தான் நன்றி தெரிவிக்க வேண்டும். நான் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அணியில் இடமில்லாமல் இருந்தேன். இரண்டு ஐபிஎல் சீசன்களில் சிறப்பாக செயல்பட்ட பிறகு எனக்கான அங்கீகாரத்தை வழங்கி அணியில் மீண்டும் எனக்கு இடம் கொடுத்தார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் எனக்கு இடம் கிடைக்க கம்பீர் சில ஆலோசனைகளை வழங்கினார்."
"என்னை தொடர்ந்து அதிக ஓவர்கள் வீசும் பழக்கத்தை கற்றுக்கொள்ள சொன்னார். ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக தொடர்ந்து இரண்டு ஓவர்கள்தான் வீச முடியும். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு ஓவர்களை வீச முடியும். இதற்கான பணியில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். சாம்பியன்ஸ் கோப்பையில் அதை நான் சிறப்பாக செய்தேன்."
"இதே போல் என்னை பேட்டிங்கிலும் கவனம் செலுத்த கம்பீர் அறிவுரை வழங்கினார். இதனால் இனி நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் என்னுடைய பேட்டிங்கையும் முன்னேற்றம் அடைய நான் முயற்சி செய்வேன். நீங்கள் அணியிலே மிகவும் அனுபவம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர் என்றால் அது குல்தீப் தான். அவர் அபாரமாக ஆசிய கோப்பை தொடரில் செயல்பட்டு இருக்கிறார்."
"நான் மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்திலும், குல்தீப் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்திலும் பந்து வீசி ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம்.அவர் பந்தை டர்ன் செய்ய முயற்சி செய்வார். நான் பந்து வேகத்தையும் பவுன்சையும் நம்பி செயல்படுவேன். தற்போது வரை எங்கள் இருவருக்கும் இது கை கொடுக்கிறது. உலகக் கோப்பையிலும் எங்களுக்கு நிச்சயம் இது கைகொடுக்கும் என நம்புகிறேன்" என்று வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.