டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் திருநங்கைகளோடு ரக்ஷா பந்தன் கொண்டாடியுள்ளார். மற்றவர்களையும் திருநங்கைகளை மனிதர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இன்று ஆகஸ்ட் 26, இந்தியாவில் சகோதரப் பாசத்தை வெளிபடுத்தும் வகையில் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. சகோதரிகள், தங்கள் சகோதரனுக்கு அன்பின் அடையாளமாக கையில் ராக்கி கயிறு கட்டுவார்கள். தென்னிந்தியாவில் இது பெரியளவில் கொண்டாடப்படவில்லை என்றாலும், வடஇந்தியாவில் முக்கிய பண்டிகையாகும்.

அந்த வகையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கம்பீர் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு தன் கையில் திருநங்கைகள் மூலம் ராக்கி கயிறு கட்டி கொண்டாடி உள்ளார்.
அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அவர், "ஆணா, பெண்ணா என்பது முக்கியமில்லை. மனிதனாக இருப்பதுதான் முக்கியம். திருநங்கைகள் அபினா அஹேர் மற்றும் சிம்ரன் ஷைக் பெருமையோடு இருக்க, என் கைகளில் அவர்களின் ராக்கி அன்பு. நான் அவர்களை எப்படி இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக் கொண்டேன். நீங்கள்?" என தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை பலரும் வரவேற்று இருக்கிறார்கள்.