மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், சமீபத்தில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் உள்ளார். ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் உலகக்கோப்பையை வென்ற பெருமை இவரையே சாரும். மேலும், இந்திய அணிக்காக 2 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே பயிற்சியாளர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில், தான் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பங்கு மிகப்பெரியது என அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்க கம்பீர் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். இதுகுறித்து ரெவ்ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், 7 அல்லது 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நான் மீண்டும் திரும்பினேன். அந்த சீசனில் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்படத் தொடங்கியபோது, அப்போதைய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா என்னை தொடர்புகொண்டு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால், அதற்கு முன்பு எந்தவொரு அணிக்கும் நான் தலைமைப் பயிற்சியாளராக இருந்ததில்லை என்பதால் ஆரம்பத்தில் எனக்கு தயக்கமாக இருந்தது. ஆலோசகராக இருப்பதை விட தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவது முற்றிலும் மாறுபட்ட சவாலாகும். எனினும், இந்திய கிரிக்கெட் மீது எனக்குள்ள நேர்மையான பற்றின் காரணமாக அந்த சவாலை தைரியமாக ஏற்க முடிவு செய்தேன் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2024 ஐபிஎல் தொடரில் நான் கொல்கத்தா அணிக்கு திரும்பாமல் இருந்திருந்தால், அந்த அணி கோப்பையை வென்று சிறப்பாக செயல்படாமல் போயிருந்தால், இன்று நான் இந்திய அணியின் பயிற்சியாளர் என்ற இந்த உயர்ந்த இடத்தில் இருந்திருக்கவே மாட்டேன். எனது இந்த வளர்ச்சிக்கு கொல்கத்தா அணி மிகப்பெரிய காரணமாக அமைந்தது. ஒரு கேப்டனாகவும் சரி, இப்போது பயிற்சியாளராகவும் சரி, கொல்கத்தா அணி எனக்கு எப்போதும் அதிர்ஷ்டமானதாகவே இருந்துள்ளது. அந்த அணியுடனும், அந்த நகரத்துடனும் எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த பந்தம் உள்ளது என்று கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
