கொல்கத்தா: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் நிதி நெருக்கடியில் இருக்கும் இந்திய ஐஸ் ஹாக்கி அணிக்கு ரூ. 4 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
இந்திய ஐஸ் ஹாக்கி அணி குவைத்தில் நடக்கும் ஆசிய சேலஞ் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள உள்ளது. ஆனால் அதற்கு தேவையான நிதி இல்லாமல் அல்லாடி வருகிறது. இதையடுத்து போட்டியில் கலந்து கொள்ள நிதி திரட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து அறிந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் தனது கௌதம் கம்பீர் அறக்கட்டளை மூலம் அந்த அணிக்கு ரூ. 4 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
இது பற்றி கம்பீர் கூறுகையில்,
இந்திய ஐஸ் ஹாக்கி அணியின் நிலை பற்றி ரேடியோ நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன். ஐஸ் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிப்பது நம் கடமை. விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியாவில் ஐஸ் ஹாக்கி கண்டுகொள்ளப்படால் இருப்பது நல்லது அல்ல. சிறிய விளையாட்டுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.
ஐஸ் ஹாக்கி அணியின் கேப்டனான லடாக்கைச் சேர்ந்த சேவாங் கியால்ட்சன் கூறுகையில்,
எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆதரவை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் குவைத்தில் நடக்கும் போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக நாங்கள் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறோம் என்றார்.