சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனின் பேட்டிங் வரிசை தொடர்ந்து மாற்றப்படுவது குறித்து, முன்னாள் இந்திய கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாகச் சாடியுள்ளார். "தொடக்க வீரராக சதமடித்த ஒருவரை, இப்போது 3 முதல் 8வது இடம் வரை பந்தாடுகிறார்கள். வாய்ப்பு கிடைத்தால், அவரை 11வது வீரராகக் கூட களமிறக்குவார்கள்" என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
சமீப காலமாகவே சஞ்சு சாம்சனின் பேட்டிங் வரிசை ஒரு நிலையானதாக இல்லாமல், தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சதங்கள் விளாசிய சாம்சன், சுப்மன் கில் அணிக்குத் திரும்பிய பிறகு மிடில் ஆர்டரில் விளையாட நிர்பந்திக்கப்பட்டார்.
குறிப்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஆசியக் கோப்பை தொடரில், சாம்சன் மூன்று போட்டிகளில் 5வது இடத்திலும், ஒரு போட்டியில் 3வது இடத்திலும் களமிறக்கப்பட்டார். மேலும், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 8வது வீரராகக் கூட அவர் களமிறக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் மீது விமர்சனம் எழுந்தது.

இந்தச் சூழல் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "இந்திய அணியில் மிகவும் துரதிர்ஷ்டவசமான வீரர் சஞ்சு சாம்சன்தான். தொடக்க வீரராக அவர் சதங்களைக் குவித்தார். ஆனால் இப்போதோ, அவரை 3 முதல் 8வது இடம் வரை எங்கு வேண்டுமானாலும் இறக்குகிறார்கள். ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால், அவரை 11வது இடத்திலும் களமிறக்க அணி நிர்வாகம் தயங்காது" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், "டாப் ஆர்டரில் சிறப்பாகச் செயல்பட்ட பிறகு, இப்படிப் பந்தாடப்படுவது சஞ்சு போன்ற ஒரு வீரருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், அணி நிர்வாகம் சொல்வதைக் கேட்டு, எந்த இடத்தில் களமிறங்கச் சொன்னாலும் வாயை மூடிக்கொண்டு விளையாடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை" என்றும் ஸ்ரீகாந்த் வருத்தம் தெரிவித்தார்.
தொடர்ச்சியான பேட்டிங் வரிசை மாற்றங்களால் சாம்சனின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்க வீரராக 11 இன்னிங்ஸ்களில் 3 சதங்களுடன் 522 ரன்கள் குவித்துள்ள சாம்சனின் சராசரி 32.63 ஆகும். ஆனால், 5வது இடத்தில் அவரது சராசரி 20.62 ஆகக் குறைந்துள்ளது. இது அவரது தன்னம்பிக்கையைக் குலைக்கும் செயல் என்று பலரும் கருதுகின்றனர்.
ஆசியக் கோப்பையில் 5வது இடத்தில் ஓரளவு சிறப்பாக ஆடியது மட்டுமே அவருக்கு இருக்கும் ஒரே நல்ல விஷயம் என்று குறிப்பிட்ட ஸ்ரீகாந்த், "அது அவருக்கு ஒரு நல்ல அறிகுறி. ஏனெனில், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான முதல் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தானாகவே தேர்வு செய்யப்படுவார். அவர் நிச்சயம் 5வது இடத்தில்தான் பேட்டிங் செய்வார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏறக்குறைய முடிவாகிவிட்டதாகக் கூறிய ஸ்ரீகாந்த், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடிய அணியே பெரும்பாலும் உலகக் கோப்பையிலும் இடம்பெறும் என்றார்.
"உலகக்கோப்பை அணியில் ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார். அதுதான் உலகக் கோப்பைக்கான அணியாக இருக்கும். அணியின் காம்பினேஷன் காரணமாக அர்ஷ்தீப் சிங் மீண்டும் வெளியேற நேரிடலாம், ஏனெனில் நாம் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டியிருக்கும்" என்று ஸ்ரீகாந்த் கூறினார். சிவம் துபேவின் இடத்தை யாராலும் பறிக்க முடியாது என்றும், அவர் விளையாடும் போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுவதாகவும் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார்.