மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராக கம்பீர்தான் வரப்போகிறார் என்ற தகவல் ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் கம்பீர் இப்போது கிரிக்கெட் குறித்து பல்வேறு மாற்றங்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றார்.
பயிற்சியாளர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே இந்திய டெஸ்ட் அணிக்கு என தனி வீரர்கள் கொண்ட ஒரு அணியை உருவாக்க வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்தி வருகிறார். இது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில் ஒரு நாள் கிரிக்கெட் அழிந்து வருவதாகவும் இதனை தடுக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டியின் குறுகிய வடிவமாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இருக்க வேண்டுமே, தவிர t20 போட்டியின் நீண்ட வடிவமாக ஒருநாள் கிரிக்கெட் இருக்கக் கூடாது என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது 380 ரன்கள் எடுத்தாலும், அதனை இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி சேஸ் செய்து விடுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதனால் ஒருநாள் கிரிக்கெட்டை போர் அடிப்பதாகவும் இதனை மாற்ற வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வளவு ஏன் இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கூட பல்வேறு மைதானங்கள் காலியாக இருந்தது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் ஒரு யோசனையை வழங்கி இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் தற்போது ஒரு முனைக்கு ஒரு பந்து என இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் சுழற் பந்துவீச்சாளர்கள் தங்களுடைய தன்மையையும் முக்கியத்துவத்தையும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இழந்து வருகிறார்கள். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன் என அனைவருமே தங்களுடைய திறமையை வெளிப்படுத்த சரிசமமான சூழ்நிலையை ஐசிசி உருவாக்க வேண்டும்.
இரண்டு புதிய பந்துகள் வீசப்படுவதால் தற்போது ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஒரு கலையை இல்லாமல் போய்விட்டது. சில வீரர்களிடமிருந்து சில வாய்ப்பை பிடுங்கிவிட்டால் எப்படி சரிசமமான போட்டி நிலவும். இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பார்? ஐசிசி மீது இதற்கு பரி சுமத்த வேண்டும் என நான் நினைக்கின்றேன். பேட்டிற்கும், பந்திற்கும் சரிசமமான ஒரு சூழ்நிலையை உருவாக்குங்கள். இந்த விதியை ஐசிசி உடனடியாக மாற்ற வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன் என்று கம்பீர் கூறியுள்ளார்.