கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீரை நியமிக்க பிசிசிஐ ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இதுவரை இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அளிக்கவில்லை.
நாளை (மே 27) விண்ணப்பம் அளிக்க கடைசி நாளாகும். இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் கவுதம் கம்பீருக்கு இது முக்கியமான நாள் ஆகும்.

இறுதிப் போட்டி முடிந்து உடன் அவர் ஒரே நாளுக்குள் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அளிப்பாரா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. இதன் பின்னணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் இருப்பதாக கூறப்படுகிறது. கவுதம் கம்பிருக்கும், ஷாருக் கானுக்குமான நட்பு கடந்த 12 ஆண்டுகளாக நீடித்து வரும் நட்பாகும்.
2012 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார். அதன் பின் 2014 ஆம் ஆண்டிலும் கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்தார். அதன் பின்னர் ஃபார்ம் அவுட் ஆகி அந்த அணியை விட்டு விலகினார். பின்னர் சில ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசகராக செயல்பட்டார். நீண்ட காலம் கழித்து மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக அந்த அணிக்கு திரும்பி இருக்கிறார்.
அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட உடனேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டி வரை முன்னேறி உள்ளது. அதனால் அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். கவுதம் கம்பீரால்தான் கொல்கத்தா அணி வீறு கொண்டு எழுந்து இறுதிப்போட்டி வரை முன்னேறி இருப்பதாக அவர் நம்புகிறார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போதும் கம்பீர், கொல்கத்தா அணியுடன் இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சென்று விட்டால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தவித்துப் போகும்.
இதை அடுத்து ஷாருக்கான் மற்றும் கொல்கத்தா அணியின் பிற உரிமையாளர்கள் கவுதம் கம்பீருக்கு அன்புக் கட்டளை ஒன்றை இட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ஆலோசகராக பயணிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ஒப்பந்தம் போடவும் கூட அவர்கள் தயாராக இருப்பதாகவும் கம்பீரிடம் கூறி உள்ளனர்.
இதன் காரணமாகவே கவுதம் கம்பீர் இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஐபிஎல் அணியின் ஆலோசகர் பதவிக்கு மட்டுமே 5 கோடி முதல் 10 கோடி வரை கவுதம் கம்பீர் சம்பளம் பெறுவார். அத்துடன் மற்ற நாட்களில் வர்ணனையாளராகவும், பல்வேறு ஊடகங்களின் கிரிக்கெட் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலமும் அவர் பெரும் வருவாய் ஈட்ட முடியும்.
இதை கருத்தில் கொண்டு இருக்கும் பிசிசிஐ தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க கவுதம் கம்பீர் ஒப்புக் கொண்டால், இதுவரை எந்த இந்திய அணி பயிற்சியாளருக்கும் அளிக்காத அளவுக்கு மிகப்பெரிய சம்பளத்தை அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.