டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவார்கள். சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் வரிசையில் தற்போது பிசிசிஐயில் தவிர்க்க முடியாத சக்தியாக கில் உயர்ந்திருக்கிறார்.
ஏற்கனவே டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகவும் டி20 அணியின் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருநாள் அணியில் கேப்டன் ஆகவும் தற்போது கில்லுக்கு பதவி கிடைத்திருக்கிறது. இதன் மூலம் கில்லை முகமாக வைத்துக்கொண்டு பின்னால் ஆட்டி வைக்கும் சக்தியாக கம்பீர் இருக்கின்றார்.

இதனால் தான் இந்தியாவின் சீனியர் வீரர்கள் ஒவ்வொருவராக தற்போது ஓய்வு முடிவை அறிவித்தனர். மேலும் டெஸ்ட் ஒரு நாள், டி20 என முற்றிலும் இளம் வீரர்களை முன்னிறுத்தும் பணியில் கம்பீர் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் தான் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கில் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கில்லுக்கு தனது வீட்டில் கம்பீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை டெல்லியில் தொடங்குகிறது.
இதனால் இந்திய வீரர்கள் தற்போது டெல்லிக்கு வந்துள்ளனர். கம்பீரின் வீடு டெல்லியில் இருப்பதால், அவர் கில் உள்ளிட்ட வீரர்களை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுக்க உள்ளார். இதன் மூலம் கில் உடன் நல்ல நட்பையும் மற்ற வீரர்களுடன் நல்ல நெருக்கத்தையும் ஏற்படுத்த கம்பீர் திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆனால் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்ட நிலையில் கம்பீரையும் அஜித் அகார்கரையும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கிழித்து தொங்கவிட்டு வரும் நிலையில் கம்பீர் இந்த விருந்தை இந்திய அணி வீரர்களுக்கு கொடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரோகித் சர்மாவை நீக்கி விட்டு ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை கொண்டாட இந்த விருந்தா என்று ரசிகர்கள் பலரும் கில்லை நோக்கி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.