மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர் ஒரு கபடதாரி என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியா வென்றதற்கு கம்பீர் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், ரசிகர்கள் பெரிய அளவில் தோனியை கொண்டாடினர்.
இது கம்பீருக்கு பிடிக்காது. இது குறித்து பலமுறை வெளிப்படையான தனது மனக்குமுறல்களை கம்பீர் கூறியிருந்தார். இந்த சூழலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கம்பீர் இருந்த போதும் பயிற்சியாளராக கம்பீர் இருந்த போதும் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அதற்கு தான் காரணம் என்பது போல் ஒரு மாயையை கம்பீர் உருவாக்கி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி,கம்பீர் ஒரு கபடதாரி, நயவஞ்சகர். தாம் சொல்வதை அவர் என்றுமே செய்ய மாட்டார்.
இந்திய அணியின் ரோகித் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார். மும்பை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார்.அவரும் மும்பை தான். எனவே மும்பையை சேர்ந்தவர்களை முன்னிறுத்தும் படலம் தற்போது நடைபெற்று வருகிறது. சக்சேனா பெரிய அளவில் சாதித்து இருக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட வாய்ப்பு கிடைத்ததில்லை.
இப்போது பயிற்சியாளராக இருக்கும் மோர்கேல், கம்பீர் லக்னோ அணியில் இருந்த போது அவரும் இருந்தார். அபிஷேக் நாயர் கம்பீர் கே கே ஆர் அணியுடன் இருந்தபோது அவரும் இருந்தார். தற்போது கம்பீர் தலைமை பயிற்சியாளராக ஆனவுடன் அனைவரையும் சேர்த்துக் கொண்டார். தான் சொல்வதற்கெல்லாம் சுற்றியுள்ளவர்கள் ஆமாம் போட வேண்டும் என்பதற்காக இந்த நபர்களை கூடவே வைத்திருக்கிறார்.
கே கே ஆர் அணியின் கேப்டனாக கம்பீர இருந்த போது ஏதோ தனி ஆளாக அவர் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்ததில்லை. நாங்கள் அனைவரும் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டோம். காலிஸ், பிஸ்லா, நரேன் ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினோம். இதனால் தான் எங்களுக்கு ஐபிஎல் பட்டம் கிடைத்தது. ஆனால் இந்த பாராட்டை எல்லாம் யார் எடுத்துக் கொண்டார்கள். தற்போது இருக்கும் சூழலில் விளம்பரம் தான் செய்யப்படுகிறது. இந்த விளம்பரங்கள் மூலம் கம்பீரும் அனைத்து பாராட்டுகளையும் பெற்று விட்டார் என்று மனோஜ் திவாரி கடுமையாக சாடியிருக்கிறார்.