லக்னோ: ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக உள்ள கவுதம் கம்பீர், அந்த அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த அணியை சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கும் அதிக தொகை கொடுத்து புனே அணியை வாங்கியிருந்த சஞ்சீவ் கொயங்கா வாங்கினார். இதையடுத்து லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதையடுத்து லக்னோ அணியை கட்டமைக்கும் பொறுப்பு கவுதம் கம்பீரிடம் வந்தது.

பின்னர் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆண்டி பிளவர், பவுலிங் பயிற்சியாளாராக மார்னே மோர்கல், ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜாண்டி ரோட்ஸ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். பின்னர் பஞ்சாப் அணியில் ஆடிவந்த கேஎல் ராகுல், லக்னோ அணிக்கு இடம்பெயர்ந்தார். இதன்பின் ஏலத்தில் சிறப்பாக இயங்கிய லக்னோ அணி, திறமையான வீரர்களை கைப்பற்றியது. அனைத்திற்கும் கவுதம் கம்பீர் மூளையாக இருந்தார்.
இதையடுத்து இரு சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு லக்னோ அணி தகுதிபெற்றது. இந்த நிலையில் லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கவுதம் கம்பீரின் உற்ற நண்பரான லாங்கர், லக்னோ அணியில் இணைந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இளம் வீரர்களை தேடி கண்டறியவும், திறனை வளர்க்கவும் எம்எஸ்கே பிரசாத்தை லக்னோ அணி ஒப்பந்தம் செய்தது.
இந்த நிலையில் லக்னோ அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லக்னோ அணியில் இருந்து விலகி, கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கவுதம் கம்பீர் ஏற்கனவே கொல்கத்தா அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் 2 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதனால் கவுதம் கம்பீர் கேகேஆர் அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.