சென்னை: இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரை ரசிகர்கள் அனைவரும் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிகளையும் அனைத்து அணிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்துள்ள நிலையில், ரசிகர்களிடையே உலகக்கோப்பை ஃபீவர் அதிகமாகி வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக்கோப்பை தொடர்பாக குட்டி ஸ்டோரிகளையும், யாருக்கும் தெரியாத தகவல்களையும் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் இணைந்து பேசி வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் குட்டி ஸ்டோரி வீடியோவின் 5வது பாகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 2011ல் உலகக்கோப்பை வென்ற இந்திய அணி குறித்து அஸ்வின் மற்றும் ஹர்ஷா போக்ளே இருவரும் பேசி இருக்கிறார்கள். அதில் ஹர்ஷா போக்ளே பேசுகையில், இந்தியாவில் கவுதம் கம்பீர் அளவிற்கு வேறு எந்த கிரிக்கெட் வீரரையும் ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டதை பார்த்ததே இல்லை. ஏனென்றால் இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர் கவுதம் கம்பீர். அணிக்காக எந்த எல்லைக்கும் சென்று போராட தயாராக இருப்பார்.
இந்திய அணிக்காக களத்திலும் சரி, எதிரணி வீரர்களுடனும் சரி.. எந்த நிலையிலும் போராடவும், சண்டை செய்யவும் தயாராக இருக்கக் கூடிய வீரர் தான் கவுதம் கம்பீர். எப்போதும் கவுதம் கம்பீர் முகத்தில் உணர்ச்சியை பார்க்க முடியாது. ஆனால் முகத்திற்கு நேராக வந்து விமர்சனங்களை கூறுவார். 2011ஆம் ஆண்டு இறுதிப்போட்டியை போல் கவுதம் கம்பீர் ஏராளமான இன்னிங்ஸ்களை இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.
நியூசிலாந்து மண்ணில் கவுதம் கம்பீர் ஆடிய ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன். இன்னும் சொல்லப் போனால் முக்கியமான போட்டிகளில் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் விளையாடக் கூடிய பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர். 2011 உலககோப்பை இறுதிப்போட்டியில் சேவாக் மற்றும் சச்சின் இருவரும் தொடக்க ஓவர்களில் ஆட்டமிழந்த போது கூட இந்திய அணி அழுத்தத்தில் இல்லாமல் பார்த்து கொண்டவர்.
ஏன், விராட் கோலி ஆட்டமிழந்த போது கூட கவுதம் கம்பீர் அழுத்தத்தை வெளிக்காட்ட கொள்ளவில்லை. அவர் நினைத்திருந்தால் இறுதிப்போட்டியில் சதம் மட்டும் அல்லாமல் 120 முதல் 130 ரன்களை விளாசி இருக்க முடியும். ஆனால் சொந்த சாதனைகளுக்காக அல்லாமல் இந்திய அணிக்காக விளையாடி ஆட்டமிழந்தார் என்று பாராட்டியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.