Manoj tiwary on Gambhir : இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பையையும் 2011 ஆம் ஆண்டு 50 உலகக் கோப்பையில் வெல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் கவுதம் கம்பீர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2009 ஆம் ஆண்டுகளில் எல்லாம் இவர் ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்திருந்தார்.
இந்த நிலையில் கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சத்தில் இருந்த கம்பீர், திடீரென்று சரிந்து தற்போது அரசியலுக்கு சென்று விட்டார். எனினும் அரசியலில் ஒரு கால் கிரிக்கெட்டில் ஒரு கால் என வைத்திருக்கும் கம்பீர் தற்போது கே கே ஆர் அணியின் மென்டராக மீண்டும் திரும்பி இருக்கிறார்.

இந்த நிலையில் கம்பீர் எப்பொழுதுமே தோனி,விராட் கோலி போன்ற வீரர்களை குறை சொல்லி கொண்டு இருப்பார். இதனால் அவர் மீது பல ரசிகர்களுக்கு வெறுப்பு இருக்கிறது. இந்த நிலையில் கம்பீரின் மறுபக்கம் குறித்து மனோஜ் திவாரி அளித்திருக்கும் பேட்டி ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனோஜ் திவாரி, இந்திய அணியில் இடம் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் காரணமே இல்லாமல் நீக்கப்பட்டார். இதேபோன்று ஐபிஎல் தொடரில் மனோஜ் திவாரி, கே கே ஆர் அணியில் முக்கியமான வீரராக இருந்தார். ஆனால் அதன் பிறகு அங்கேயும் அவர் சரிவை கண்டார். இதற்கு காரணம் கம்பீர்தான் என தெரிகிறது.
2010 ஆம் ஆண்டு கே கே ஆர் அணிக்கு மனோஜ் திவாரி வந்திருக்கிறார்.அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த அவர், 2012 ஆம் ஆண்டு அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார்.இந்த நிலையில் கம்பீருக்கும் மனோஜ் திவாரிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.இது மெல்ல மெல்ல அதிகமாக ஒரு கட்டத்தில் அங்கிருந்தும் மனோஜ் திவாரி நீக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோஜ் திவாரி ,2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு போட்டியின் போது கம்பீருக்கும் எனக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது கம்பீர் என்னை வெளிப்படையாகவே மிரட்டினார். இந்தப் போட்டி முடிந்தவுடன் நீ என்னை வந்து பார்.அப்போது நான் யார் என்று உனக்கு நான் காட்டுகிறேன். உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை இன்று முடிந்தது என்று கம்பீர் என்னை பார்த்து கூறினார்.
கம்பீரின் இந்த பேச்சு எனக்கு வருத்தத்தை கொடுத்தது. பத்திரிக்கையாளர்கள் கூட அங்கு நின்று கொண்டிருந்தார்கள். கம்பீரின் இந்த பேச்சு அவர்கள் காதில் நிச்சயம் விழுந்திருக்கும். கம்பீர் இவ்வாறு என்னிடம் பேசி இருக்கக் கூடாது. எனினும் கம்பீரிடம் இந்த மோதல் வந்ததற்கு நான் வருத்தம் அடைகிறேன். ஏனென்றால் நான் எப்போதும் சீனியர்களுக்கு மரியாதை கொடுக்கும் வீரனாக தான் இருந்தேன். அதனை நான் தவிர்த்து இருக்கலாம். இதுவரை எந்த சீனியரிடம் நான் மோதியது இல்லை.ஆனால் அந்த ஒரு சம்பவம் எனக்கு தீங்காக அமைந்து விட்டது.
கம்பீரை பகைத்துக் கொண்டதால் என்னுடைய வங்கி கணக்கில் இருந்த பணமும் குறைய தொடங்கி விட்டது.இந்த மோதலுக்கு முன்பு நானும் கம்பீரும் நல்ல ஒரு தொடர்பில்தான் இருந்தோம். நாங்கள் கிரிக்கெட் குறித்து நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறோம். பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இருக்கலாம் என்பது குறித்து எல்லாம் நான் அவருக்கு ஆலோசனை வழங்குவேன். ஆனால் அந்த பிரச்சனைக்கு பிறகு எங்களுடைய தொடர்பு பழையது போல் இல்லை என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.