மும்பை: ஆசிய கோப்பையை ஒன்பதாவது முறையாக வென்று இந்திய அணி சாதனை படைத்திருக்கிறது. பாகிஸ்தானை அந்த தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வீழ்த்தி இந்த கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து இந்திய அணி வீரர்கள் துபாயில் இருந்து இன்று தாயகம் திரும்பியுள்ளனர்.
சூரியகுமார் யாதவ் , மும்பைக்கு வந்த நிலையில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோன்று திலக் வர்மாவுக்கு ஹைதராபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கம்பீர் மட்டும் டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக அகமதாபாத்துக்கு சென்று இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி அக்டோபர் இரண்டாம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. ஆசிய கோப்பை போட்டிக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் இடையே மூன்று நாட்கள் மட்டுமே ஓய்வு இருக்கிறது.
இந்த தருணத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அணியை தயார்படுத்த வேண்டும் என்பதற்காக கம்பீர் டெல்லிக்கு செல்லாமல் நேரடியாக அகமதாபாத் வந்துள்ளார். இது ஒட்டுமொத்த ரசிகர்களையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. இதேபோன்று கில், பும்ரா அக்சர் பட்டேல் ஆகியோரும் அகமதாபாத்துக்கு வந்து ஓய்வில் இருக்கின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா தகுதி பெற வேண்டும் என்றால் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் படுதோல்வியை தழுவியது.
இதனால் டெஸ்ட் போட்டியில் இழந்த மானத்தை சொந்த மண்ணில் மீட்க வேண்டும் என்பதற்காக இந்திய அணி முயற்சித்து வருகிறது. இதனால் ஏற்கனவே இந்திய அணி வீரர்கள் அகமதாபாத்தில் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது கம்பீர் அவர்களுடன் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் கம்பீர் கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் பம்பரம் போல் சுழன்று வருவதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.