எனக்கு கிரெக் சாப்பல் காலம்தான் நினைவுக்கு வருது.. கம்பீர் குறித்து ஓபனாக பேசிய ஜெய்ஸ்வால் கோச்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் அணுகுமுறை ஆகியவை கிரெக் சாப்பல் காலத்தை நினைவூட்டுவதாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறுவயது பயிற்சியாளர் ஜுவாலா சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்
.
2005 முதல் 2007 வரை கிரெக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியில் பல குழப்பங்கள் நடந்தன. அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி அணியில் இருந்து நீக்கப்பட்டார். ராகுல் டிராவிட் கேப்டன் ஆக்கப்பட்டார். அதன் பின் இந்திய அணியில் விரிசல் ஏற்பட்டது.

2007 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் இந்திய அணி குரூப் சுற்றில் வங்கதேச அணியிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய பின்னரே இந்த இருண்ட காலம் முடிவுக்கு வந்தது. இப்போது கிட்டத்தட்ட அதே போன்ற சூழல் நிலவுவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணங்களில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி இழந்தது குறித்து ஜுவாலா சிங் நியூஸ்18 ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "தற்போது இந்திய கிரிக்கெட் மிகவும் மோசமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. கம்பீரின் பயிற்சியின் கீழ் நாம் அயர்லாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவிலும் தோற்றோம். உள்நாட்டிலும் டெஸ்ட் தொடரை இழந்துள்ளோம்.
இதையெல்லாம் பார்க்கும்போது 2005-06 காலகட்டத்தில் கிரெக் சாப்பல் பயிற்சியாளராக இருந்தபோது மூத்த வீரர்களை ஓரம் கட்டி அணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய அதே நிகழ்வுகள் தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன" என்றார்.
"2027 உலகக் கோப்பை மிக அருகில் உள்ளதால், தற்போதே தெளிவான திட்டமிடல் தேவை. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உலகக் கோப்பை திட்டத்தில் இருக்கிறார்களா இல்லையா என்பதைத் தேர்வுக்குழுவினர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவர்கள் இருதரப்பு தொடர்களில் சொதப்பினாலும் அவர்களைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். இதில் எந்த ஒரு ரகசியமும் இருக்கக் கூடாது" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அணியின் தேர்வு முறையைக் கடுமையாகச் சாடிய ஜுவாலா சிங், இளம் வீரர்களைச் சரியான வரிசையில் களம் இறக்கி அவர்களை வளர்த்தெடுக்க நிர்வாகம் தவறிவிட்டதாகக் கூறினார். மேலும், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் உள்ளதால், அவருக்கு இணையான மாற்றுப் பந்துவீச்சாளர்களைத் தற்போதே கண்டறிந்து உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications

