“கம்பீரை பயிற்சியாளராக சேர்த்துக் கொள்ள மாட்டோம்”.. கத்துக்குட்டி ஐஸ்லாந்து நையாண்டி பதிவு
பெல்பாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளத்தில் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளது.
இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்த சில மணி நேரங்களிலேயே, ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. அது தற்போது இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், "எங்களது பயிற்சிப் பணியாளர் குழுவில் கௌதம் கம்பீரைச் சேர்க்க எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம். இருப்பினும் அவரிடம் அசாத்திய திறமை உள்ளது. இவ்வளவு திறமையான இந்திய நட்சத்திர வீரர்களைக் கொண்டு அயர்லாந்து மண்ணில் இதுபோன்ற தோல்வி முடிவுகளைப் பெறுவதற்கு உண்மையிலேயே தனித்துவமான திறமை வேண்டும்" என்று மிகவும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய அணி கடந்த மார்ச் 2026-இல் டி20 உலகக் கோப்பையை வென்ற 3 மாதங்களிலேயே இந்த அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அயர்லாந்து சென்ற இந்திய அணி, முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 1 ரன் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. இந்திய அணியின் பந்துவீச்சு ஓரளவு சிறப்பாக இருந்தபோதிலும், பேட்டிங் வரிசை மிக மோசமாகச் செயல்பட்டது. குறிப்பாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், டி20 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங்கில் சோபிக்கத் தவறினர்.
அயர்லாந்து தொடரின் ஏமாற்றத்திற்குப் பின், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்தத் தொடர் ஜூலை 1 முதல் ஜூலை 11 வரை நடைபெறுகிறது. அயர்லாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காத 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஜூலை 1 அன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications

