மும்பை : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று மதியம் ஒரு மணி அளவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் 2011 உலக கோப்பை வென்ற கௌதம் கம்பீர் தமக்கு பிடித்த 15 வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்.
இதில் முக்கிய வீரருக்கு அவர் இடம் அளிக்காதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கம்பீர் தேர்வு செய்துள்ள அணியில் ரோகித் சர்மா , சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கிறார்கள்.

மேலும் ஆசிய கோப்பையில் அணியில் இடம் கிடைக்காத சூரியகுமார் யாதவையும், கம்பீர் சேர்த்து இருக்கிறார். அதேபோன்று கம்பிர் தனது அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்களை சேர்த்து இருக்கிறார். கே எல் ராகுல் மற்றும் இசான் கிஷன் என இருவருக்கும் கம்பீர அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இதேபோன்று ஆல்ரவுண்டர்கள் வரிசையில் கௌதம் கம்பீர் செய்திருக்கும் மாற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
அதில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கம்பீர் இடம் கொடுத்திருக்கிறார்.ஹர்திக் பாண்டியா ஜடேஜா ஆகியோரும் ஆல் ரவுண்டர் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் வேக பந்துவீச்சாளராக கம்பீர் ,பும்ரா, சமி ஆகியோருக்கு வாய்ப்பு தந்து இருக்கிறார். சுழற் பந்துவீச்சாளராக கம்பீர் குல்தீப் யாதவை தேர்வு செய்திருக்கிறார்.
மேலும் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலும் கம்பீர் அணியில் இடம் பிடித்திருக்கிறார். இந்த நிலையில் கம்பீர் அணியில், நடு வரிசையில் ஆசிய கோப்பையில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக மீண்டும் வந்து இருப்பதால் அவர் போதிய ஆட்டத்தில் விளையாடாத நிலையில் அவருக்கு கம்பீர் வாய்ப்பு தரவில்லை.
இதேபோன்று கம்பீர் அணியில் சஞ்சு சாம்சனும் இடம்பெறவில்லை. கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் நடுவரிசையில் சிறப்பாக விளையாடக் கூடியவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கும் நிலையில் அவருக்கும் கம்பிர் அணியில் இடம் இல்லை. இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய இடதுகை பேட்ஸ்மேனான திலக் வர்மாவுக்கும் கம்பிர் இடம் தரவில்லை. எனினும் ஆல்ரவுண்டர் என்ற காரணத்தினால் வாஷிங்டன் சுந்தருக்கு கம்பீர் இடம் கொடுத்திருக்கிறார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் தொடரிலிருந்து பெரிய அளவில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.