உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் டோணியுடன் கை குலுக்குவதை தவிர்த்தாரா கம்பீர்?
டெல்லி: உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது டோணியுடன் கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டதாக தன்மீது எழுந்த புகாரை புகைப்பட ஆதாரத்தோடு மறுத்துள்ளார் மற்றொரு கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர்.
உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான விஜய் ஹசாரே போட்டித்தொடரின் காலிறுதி போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில், டோணி ஆடிய ஜார்கண்ட் அணியை, கவுதம் கம்பீர் இடம்பெற்றிருந்த டெல்லி அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
போட்டி முடிவுக்கு வந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொண்டார்கள். அதேபோல், கவுதம் கம்பீரும் ஜார்கண்ட் அணி வீரர்களுக்கு கை குலுக்கி கொண்டே வந்தார்.

தவிர்த்தாரா கம்பீர்
ஜார்கண்ட் அணிக்காக விளையாடிய இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கு கை குலுக்காமல் எதிரே வந்த கவுதம் கம்பீர் வேண்டும் என்றே புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
போட்டோ வெளியீடு
தற்போது கவுதம் கம்பீர் இந்த சர்ச்சை பற்றி வாய் திறந்துள்ளார். டோணியிடம் கைகுலுக்கியுள்ள புகைப்படத்தையும் டிவிட்டரில் வெளியிட்டு சம்பவத்தை மறுத்துள்ளார். மேலும், செய்திகளை வெளியிடும் முன் உண்மைகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள் எனவும் ஊடகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கோபம் என வதந்தி
கம்பீரை இந்திய அணியில் சேரவிடாமல் டோணி பார்த்துக்கொள்வதாகவும், அக்கோபத்தில், கம்பீர் கை குலுக்கலை தவிர்த்ததாகவும், டிவி சேனல்கள் செய்தி வெளியிட்ட நிலையில், இந்த மறுப்பு வந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான்
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவுதம் கம்பீர் "நாங்கள் இருவரும் கை குலுக்கும் இந்த புகைப்படம், இந்தியா- பாகிஸ்தான் பிரதமர்களில் கை குலுக்களைவிடவும் அதிக செய்திகளை உருவாக்கிவிட்டது. உண்மைகளை சரிபார்த்து வளருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications