டெல்லி: இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார் கவுதம் காம்பீர்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பெற்றது.

கான்பூரில் நடந்த இந்த போட்டியின் போது மணிக்கட்டு பகுதியில் கே.எஸ். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இவருக்கு பதில் ஷிகர் தவான் பீல்டிங் செய்தார். இதனால் மீதமுள்ள இருபோட்டிகளில் ராகுல் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் இவருக்கு பதில் காம்பீர் (34) மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014-ல் இங்கிலாந்து தொடருக்குப் பின்னர் அணியில் இடம்கிடைக்காமல் தவித்துவந்த காம்பீர், சமீபத்திய துலீப் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.
மேலும், கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தினை கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருப்பது காம்பீருக்குக் கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் சிக்கன் குனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு பதிலாக சுழற் பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ்(26), வாய்ப்பு பெற்றுள்ளார்.