மும்பை: 2024 ஐபிஎல் தொடரின்போதே ஜெய் ஷா தான் தம்மை வற்புறுத்தி இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை தமக்குவழங்கியதாக கம்பீர் தெரிவித்துள்ளார். அப்போது தான் ஏற்கத் தயாராக இல்லை என்றும், ஜெய்ஷாவின் இந்த முடிவு ஆச்சரியத்தை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த பிறகு, 2024 ஜூலை மாதம் கம்பீர் இந்திய அணியின் தலைமைக் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில ஆண்டுகளில் அவர் இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றார். சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த இரண்டு அவமானகரமான தொடர் தோல்விகளைத் தன்னால் மறக்க முடியாது என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

தலைமைப் பயிற்சியாளராகக் கம்பீருக்கு எந்த முன் அனுபவமும் இல்லாததால், 2024 ஜூலையில் அவரது நியமனம் பலருக்கும் வியப்பை அளித்தது. ஜெய் ஷா இந்தப் பொறுப்பை வழங்கியபோது, கம்பீரும் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய கம்பீர், "மும்பையில் ஐபிஎல் போட்டி விளையாடிக் கொண்டிருந்தோம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் போட்டி. நாங்கள் செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் தங்கியிருந்தோம், ஜெய் பாய் தான் என்னை அழைத்தார். அதிகாலையில் அழைத்து, 'உங்களுக்கு ஓர் வாய்ப்பு வழங்குவேன் அதற்கு நீங்கள் முடியாது என்று சொல்ல முடியாது’ என்றார்.
நான் 'என்ன?’ என்றதும், அவர் 'நீங்கள் தான் தலைமைப் பயிற்சியாளராக வேண்டும்’ என்றார். உண்மையாகச் சொல்ல வேண்டுமானால், அந்த நேரத்தில் நான் தயாராக இருக்கவில்லை" என்று கம்பீர் தெரிவித்தார். "இது ஒரு மாபெரும் ஆச்சரியம், ஏனெனில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பது ஒரு கௌரவம் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு பாக்கியம், ஏனெனில் மீண்டும் டிரஸ்ஸிங் ரூமுக்குச் சென்று அந்த இந்திய ஜெர்ஸியை அணிந்து நாட்டிற்காக ஏதாவது சிறப்பு செய்யக்கூடிய வாய்ப்பு பலருக்குக் கிடைப்பதில்லை" என்று அவர் தெரிவித்தார்.
"எத்தனை முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது என்று சொல்லுங்கள்? மிகச் சிலரே. அதன் பிறகு அவர் என்னிடம் முடியாது என்று சொல்ல முடியாது என்று கூறினார். பின்னர், நான் குடும்பத்தினருடனும், என் மனைவி நடாஷாவுடனும் பேசினேன். ஆனால், ஜெய் ஷாவுக்கு நான் தலைவணங்குகிறேன். அவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். செய்தியாளர் சந்திப்பின்போதும் அவருக்கு நன்றி தெரிவித்தேன்" என்றும் கம்பீர் கூறினார்.

"இந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டபோது, தலைமைப் பயிற்சியாளராக எனக்கு எந்த அனுபவமும் இல்லை என்பதை நான் நன்கு உணர்ந்தேன். ஏனென்றால், நான் எந்த அணியின் அல்லது எந்தத் தொடரின் தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்ததில்லை. நான் எப்போதும் ஒரு வழிகாட்டியாகவே இருந்தேன். ஆனால், இந்த அழுத்தமான பெரிய பதவிக்கு என்னை நம்பியதற்காக அவருக்கு என்னால் போதிய அளவு நன்றி சொல்ல முடியாது" என்று அவர் குறிப்பிட்டார்.
பயிற்சியாளராக இருந்த காலத்தில், சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவிடம் ஏற்பட்ட அவமானகரமான தோல்விகளைத் தன்னால் மறக்க முடியாது என கம்பீர் நினைவுகூர்ந்தார். இது ஒரு கடினமான காலகட்டம் என்றும், அச்சமயத்தில் பலர் தன்னுடன் தொடர்புகொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"மும்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்ற பிறகு, நான் விமான நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஜெய் ஷா எனக்கு போன் செய்தார். அவர் என்னை கவலைப்பட வேண்டாம். தைரியமாக இருக்கச் சொன்னார், அந்தக் கடினமான நேரத்தில் என்னுடன் இருப்பதாகத் தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற பிறகும் அவர்தான் எனக்கு போன் செய்தார். நான் விமான நிலையத்தில் மிகவும் மனச்சோர்வுடன் இருந்தேன்" என்று கம்பீர் வெளிப்படுத்தினார்.
"நம்மளுடைய விஷயங்கள் நன்றாக இருக்கும்போது பெரும்பாலும் யாரும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ஆனால், நாம் ஒரு கடினமான காலகட்டத்தில் இருக்கும்போது, யாராவது அழைத்து ஆதரவளித்தால், அணிக்கு தலைமை பயிற்சியாளராக இல்லாத காலத்திலும் கூட அதை நான் எப்போதும் மதிப்பேன்" என்று அவர் கூறினார்.