மும்பை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. இந்த சூழலில் கம்பீருக்கு தற்போது இருக்கும் மிகப்பெரிய சவால் 2025 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தான்.
இந்த போட்டியின் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறது. இதற்கான காய் நகர்த்தலை இப்போது பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.

இதற்கு காரணம் இந்தியா சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு வெறும் 6 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கின்றது. இலங்கைக்கு எதிராக ஜூலை மாதத்திலும் இங்கிலாந்துக்கு எதிராக ஜனவரி பிப்ரவரி மாதத்திலும் இந்தியா ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு இந்திய அணி இப்போதிலிருந்தே அணியை தயார் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது.
இந்த சூழலில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்துள்ள புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் இந்திய அணியில் எந்த மாதிரி வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் பொருத்தவரை இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கௌதம் கம்பீர் என்னை பொறுத்தவரை ஒரே மாதிரி விளையாடக்கூடிய வீரர்கள் இனி இந்திய ஒரு நாள் அணிக்கு தேவை இல்லை.
ஒருநாள் அணியின் பல கட்ட குணங்களை உடைய வீரர்கள் அணிக்குள் கட்டமைக்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆங்கர் ரோல் செய்யும் வீரர் வேண்டும். இதேபோன்று பயமின்றி அதிரடியாக விளையாடக்கூடிய ஒரு வீரரும் வேண்டும்.மேலும் பல சூழலுக்கு ஏற்ப தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக்கொண்டு விளையாடக்கூடிய வீரரும் வேண்டும்.
மேலும் கடினமான சூழ்நிலையில் அணியை வெற்றி பெற வைக்க வேண்டிய வீரர்களும் வேண்டும். இப்படி கலவையான வீரர்கள் இருந்தால் மட்டுமே சிறந்த ஒரு நாள் அணியாக இருக்க முடியும். இதனால் தான் சொல்கின்றேன், ஒரே மாதிரி விளையாடக்கூடிய வீரர்கள் அணிக்கு வேண்டாம் என்று கம்பீர் கூறியுள்ளார்.