
2வது டெஸ்ட் போட்டி
நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 1 மற்றும் 10 ரன்களுக்கெல்லாம் ஆட்டமிழந்த டேவிட் வார்னர், 2வது டெஸ்டிலும் வெறும் 15 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். சமீப காலமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடித்த இரட்டை சதத்தை தவிர வேறு எந்தவொரு நல்ல இன்னிங்ஸையும் வார்னர் அடிக்கவில்லை. இதனால் அவருக்கு இனி வாய்ப்பே தரக்கூடாது என அந்நாட்டு ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கம்பீர் விமர்சனம்
இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், வார்னரின் இன்னிங்ஸை பார்த்தாலே மிகவும் தடுமாறுகிறார் என தெரிகிறது. வார்னருக்கு எதிராக சிறப்பாக பந்துவீசியுள்ள அஸ்வினுக்கு எதிராக மட்டும் திணறவில்லை, முகமது ஷமி, சிராஜ் போன்றோருக்கு எதிராகவும் பதற்றமாக உள்ளார். இது அவரின் அனுபவத்தையே கேள்விக்குறியாக்குகிறது.

15 வருட அனுபவம்
இந்தியாவுக்கு உங்களின் 3வது டெஸ்ட் பயணம் இதுவாகும். 15 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறீர்கள். அப்படி இருக்கையில் இந்தியா ஒன்றும் புதுமையான பிட்ச் கிடையாதே உங்களுக்கு. இந்திய பேட்டர்கள் 15 நாட்களுக்கு முன்பு தான் ஆஸ்திரேலியா செல்வார்கள். அதன்பிறகு சூழலை புரிந்துக்கொள்ள நேரம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் வார்னர் எப்போதுமே விளையாடும் இடம் தானே.

சிறந்த பேட்டர் இல்லை
டேவிட் வார்னரின் ஆட்டத்தை எடுத்துக்கொண்டால் இங்கிலாந்து மற்றும் இந்திய களங்களில் மோசமாக திணறுகிறார். இந்த இரண்டு இடங்களிலும் டெஸ்ட் ஆடுவதற்கே பயப்படுகிறார். எனவே வார்னரை மிகச்சிறந்த பேட்டர் எனக்கூறவே கூடாது. ஆஸ்திரேலியாவில் மட்டும் சிறந்த வீரர் என்று கூறிக்கொள்ளலாம் என கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க காயம் காரணமாக 2வது டெஸ்டில் இருந்து பாதியிலேயே வார்னர் விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











