மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் ஒரு ஆண்டுக்கு மேல் பணியாற்றி வருகிறார். ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள் தொடரை இழந்தாலும் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. தற்போது கம்பீர் தென்னாபிரிக்க தொடருக்கு தயாராக இந்தியா வந்துள்ளார்.
அப்போது பிசிசிஐயின் இணையதளத்திற்கு பேட்டியளித்த அவர் பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார். இதில் பயிற்சியாளராக தமக்கு உள்ள கடினமான பணி குறித்து கம்பீர் உருக்கமாக பேசியுள்ளார். அதில் இந்திய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் இருக்கிறார்கள்.

ஒரு பயிற்சியாளராக நான் சந்திக்கும் கடினமான பணியே ஒன்று தான். அது ஒரு வீரரிடம் நீ இந்த போட்டியில் விளையாட வில்லை என்று சொல்வது தான். காரணம் பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள் அனைவருமே திறமை வாய்ந்த வீரர்கள். அனைவருமே பிளேயிங் லெவனில் இடம்பெறக்கூடிய தகுதி உடையவர்கள்.
ஆனால் 11 வீரர்களை மட்டுமே என்னால் தேர்வு செய்ய முடியும். எனவே அன்றைய தினத்தில் எந்த காம்பினேஷன் சரியாக இருக்கும் என்பதை மனதில் வைத்து தான் நாங்கள் வீரர்களை தேர்வு செய்கின்றோம். இப்படி இருக்கும் போது ஒரு வீரரிடம் சரியான முறையில் நாம் உரையாடல் நடத்த வேண்டும். அந்த உரையாடல் மிகவும் தெளிவானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டும்.
அந்த உரையாடல் நிச்சயமாக மிகவும் கடினமாக இருக்கும். ஒரு வீரரிடம் நீ விளையாடவில்லை என்று சொல்வது பயிற்சியாளராக எனக்கு கடினமானதாக மாறிவிட்டது. அந்த வீரருக்கும் அது கஷ்டமாக தான் இருக்கும். ஏனென்றால் தகுதி வாய்ந்த வீரர் நிச்சயம் வருத்தப்படுவார். ஆனால் நான் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இதயத்தில் இருந்து நான் சொல்ல நினைப்பதை அந்த வீரர்களிடம் காரணத்துடன் சொல்வேன்.
இதை தவிர வேறு ஒரு விஷயமும் அங்கு நடக்காது. சில வீரர்கள் நாம் சொல்வதை புரிந்து கொள்வார்கள். ஒரு பயிற்சியாளருக்கும், வீரருக்கும் இந்த உரையாடல் கண்டிப்பாக இருக்கவேண்டும். வீரர்கள் அணியில் தேர்வு செய்யப்படாததற்கு இதைத்தவிர வேறு எந்த காரணமும் கிடையாது. ஆனால் பலரும் இதை சூழ்ச்சி என்றும் சர்ச்சையாகவும் மாற்ற முயற்சி செய்கிறார்கள்.
குல்தீப், பும்ரா, கில்,வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுகிறார்கள். எனவே அவர்களை எப்படி பயன்படுத்துவது என்பதில் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய தொடருக்கு பின் ஒரு டெஸ்ட் மேட்சில் காலை 9 மணிக்கு ராபாடாவை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலே கடினமாக இருக்கிறது என்று கம்பீர் கூறியுள்ளார்.