மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ தரப்பில் அடுத்த பயிற்சியாளரை தேடும் பணி தொடங்கியது. இதனிடையே ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் முதல் சீசனிலேயே வென்று கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் பணிக்காக அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் அறிவித்தார். இதனால் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் கவுதம் கம்பீர் என்று கூறப்பட்டு வந்தன. இதற்கான நேர்காணல் முடிவடைந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பை, கேப்டனாக 2 ஐபிஎல் கோப்பை, ஆலோசகராக ஒரு ஐபிஎல் கோப்பை என்று ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ள கவுதம் கம்பீர் இந்திய அணிக்கும் அடுத்தடுத்து ஐசிசி கோப்பைகளை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளின் போதே வெற்றி மட்டுமே எனது இலக்கு என்று கவுதம் கம்பீர் கூறியிருப்பார்.
இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதை காட்டிலும், இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதையும் இந்திய அணியால் செய்ய முடியும் என்று கவுதம் கம்பீர் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 4 ஆண்டுகள் இந்திய அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கவுதம் கம்பீருக்கு புதிய சவால் அமைந்துள்ளது.
இந்த 4 ஆண்டுகளில் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2026 டி20 உலகக்கோப்பை, 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2027 உலகக்கோப்பை ஆகிய 5 ஐசிசி தொடர்கள் நடக்கவுள்ளன. இந்த 5 ஐசிசி தொடர்களில் குறைந்தபட்சம் 3 தொடர்களிலாவது இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிலும் 2 முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போதும் இந்திய அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதோடு, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.