மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். அவரது பயிற்சியின் கீழ் இந்தியா 19 டெஸ்டுகளில் 7ல் மட்டுமே வென்ற போதிலும், பதவி விலகும் கோரிக்கைகளை பிசிசிஐ மறுத்துள்ளது.
கம்பீர் 2024 ஜூலையில் ராகுல் டிராவிட்டுக்குப் பதிலாகப் பொறுப்பேற்றார். அவரது தலைமையில் ஆஸ்திரேலியாவில் 1, இங்கிலாந்தில் 2 வெற்றிகளை இந்தியா பெற்றது. ஆனால் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 0-3 மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 0-2 எனப் படுதோல்விகளைச் சந்தித்தது. சொந்த மண்ணில் 5 டெஸ்ட் தோல்விகள் மற்றும் இரண்டு முறை ஒயிட்வாஷ் ஆன ஒரே பயிற்சியாளர் கம்பீர் ஆவார்.

தென்னாப்பிரிக்காவுடனான சொந்த மண் டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்த பிறகு, கம்பீரை நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. எனினும், பிசிசிஐ அவரை நீக்க தயாராக இல்லை. வி.வி.எஸ். லக்ஷ்மண் அவருக்குப் பதிலாக நியமிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்களை செயலாளர் தேவ்ஜித் சைகியா ஏற்கனவே மறுத்திருந்தார்.
கம்பீரின் பதவி நீக்கம் குறித்த தகவல்களை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவும் மறுத்தார். இது குறித்து பேசிய அவர், "தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பற்றிய யூகங்கள் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். புதிய பயிற்சியாளரை நியமிக்கவோ அல்லது தற்போதுள்ள பயிற்சியாளரை நீக்கவோ எந்தத் திட்டமும் இல்லை என்பதை பிசிசிஐ செயலாளர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்," என்றார்.
கம்பீரின் தற்போதைய ஒப்பந்தம் 2027 நவம்பர் வரை நீடிக்கிறது. இதனால் கம்பீரை யாராலும் தொட முடியாத என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் டி20 உலககோப்பையை இந்திய அணி வெல்லவில்லை என்றால், கம்பீர் பதவி நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி 2026 ஆகஸ்ட்டில் இலங்கையுடன், பிறகு நியூசிலாந்துடன் டெஸ்ட் தொடர்களில் மோதுகிறது. இறுதி WTC சுழற்சியின் தொடர் 2027 முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும். WTC 2027 இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற, மீதமுள்ள 9 போட்டிகளில் இந்தியா குறைந்தது 7ல் வெற்றி பெற வேண்டும்.