இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி மோசமாக இழந்ததைத் தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். சமூக வலைதளங்களில் கம்பீரின் தோல்விப் பட்டியலை அடுக்கி, அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தூரில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் ஒருநாள் தொடரை இழந்து (2-1) சுப்மன் கில் அணி தலைகுனிந்துள்ளது. இந்த வரலாற்றுத் தோல்விக்குப் பிறகு, ரசிகர்கள் பயிற்சியாளர் கம்பீரை நோக்கித் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதல், அவரது பயணம் ஒரு 'ரோலர் கோஸ்டர்' போலவே உள்ளது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு வரலாறு காணாத வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவரது செயல்பாடு சராசரிக்கும் குறைவாகவே உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபியை கம்பீர் தலைமையில் இந்தியா வென்றது உண்மைதான். ஆனால், இருதரப்புத் தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து சறுக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கம்பீரின் பதவிக்காலத்தில் நடந்த குளறுபடிகள் மற்றும் தோல்விகளைப் பட்டியலிட்டு விமர்சித்து வருகின்றனர். ஒரு ரசிகர் பதிவிட்டுள்ள அந்தப் பட்டியல் இதோ:
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்வி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்வி.
தற்போது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்வி.
சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழுமையாக 'ஒயிட் வாஷ்' தோல்வி.
சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 'ஒயிட் வாஷ்' தோல்வி.
10 ஆண்டுகளுக்கு பின் பார்டர் கவாஸ்கர் டிராபியை (BGT) இந்திய அணி இழந்தது.
சொந்த மண்ணில் நடந்த 5 டெஸ்ட் போட்டிகளிலும் சேனா (SENA) நாடுகளிடம் தோல்வி.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற கட்டாயப்படுத்தியது மற்றும் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவியைப் பறித்தது.
இவ்வாறாக கம்பீரின் மோசமான செயல்பாடுகளை பட்டியலிட்டு இருக்கிறார் அந்த ரசிகர்.
அடுத்த 5 மாதங்களுக்கு இந்திய அணி எந்த ஒருநாள் போட்டியிலும் விளையாடப்போவதில்லை. டி20 உலகக்கோப்பையில் கவனம் திரும்பவுள்ள நிலையில், கம்பீரின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
அடுத்து வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர்களுக்கு இந்திய அணியை வழிநடத்த கம்பீர் சரியான நபர் தானா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இந்த 5 மாத இடைவெளியில் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சில அதிரடியான, கடினமான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது.
வீரர்கள் மற்றும் நிர்வாகத் தரப்பில் பெரிய மாற்றங்கள் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். மொத்தத்தில், இந்தத் தோல்வி கம்பீரின் இருக்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.