இலங்கையிடம் இந்தியா தோற்றால்.. கம்பீருக்கு ஏற்படப்போகும் சிக்கல்.. பதவி இருக்கும் ஆனால்..!
காலே: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கையின் காலே நகரில் இன்று துவங்குகிறது. டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பையை வென்று குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் அசத்திய இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு, இந்த டெஸ்ட் தொடர் மிகப்பெரிய அக்னிப் பரீட்சையாக அமைந்துள்ளது.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் சந்தித்த தொடர் தோல்வி, இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதற்கு முந்தைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இந்தியா இழந்து இருந்தது. இதனால் கம்பீரின் டெஸ்ட் அணுகுமுறை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

இலங்கை டெஸ்ட் தொடரில் தோற்றாலும் கம்பீரின் பதவி பறிபோகாது என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த டெஸ்ட் தொடரில் தோற்றால் அது கம்பீரின் மீதான மதிப்பை பெரிய அளவில் சரிவடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கை மண்ணில் உள்ள காலே மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களின் கோட்டையாக கருதப்படுகிறது. கடந்த 1998 முதல் இங்கு நடந்துள்ள 49 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி 27 போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை சமாளிப்பது இந்திய வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
சுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆடுகின்றனர். காயம் அடைந்த சாய் சுதர்சனுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் 3வது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது. நடுவரிசையில் ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இலங்கை சென்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. அதேபோன்ற ஒரு வெற்றியை பெற இளம் கேப்டன் சுப்மன் கில் முயல்வார்.


Click it and Unblock the Notifications
