மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடரின் போது தேர்வு குழுவினர் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை உளவு பார்க்க இந்திய அணி பயிற்சியாளர் கம்பீர் ஆள் வைத்ததாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கடும் குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு தொடர் தோல்விகளை அணி சந்தித்து வருகிறது.
இதனால் கம்பீர் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால் கம்பீரின் பதவி பறிபோகலாம் என்ற அபாயம் உள்ளது. இந்த நிலையில் கம்பீர் குறித்து பெயரை வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் அதிர்ச்சி கரமான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், கம்பீர் தன்னுடைய உதவியாளர் ஒருவரை தேர்வுக்குழுவினருடன் எப்போதும் வைத்திருந்தார். ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு குழுவினர் சென்ற காரிலே கம்பீரின் உதவியாளரும் பயணித்தார். இதன் மூலம் தேர்வுக்குழுவினரால் ரகசியமாக கூட எந்த ஒரு கருத்தையும் பேசிக் கொள்ள முடியவில்லை.
தேர்வு குழுவினரின் காரில் அந்த மூன்றாவது நபர் ஏன் இருந்தார்? டெஸ்ட் போட்டியில் பிசிசிஐ நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கம்பீரின் உதவியாளரும் அமர்ந்திருந்தார். இந்திய அணி வீரர்களுக்காக வழங்கப்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல் வசதி மற்றும் உணவுகளை கம்பீரின் உதவியாளரும் எடுத்துக் கொண்டார்.
கம்பீரின் நடவடிக்கை சரியாக தோன்றவில்லை. ஒன்று நீங்கள் ரவி சாஸ்திரி போல் பயிற்சியாளராக நடந்து கொள்ள வேண்டும். ஊடகங்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வீரர்களை உத்வேகமிக்க நபர்களாக மாற்ற வேண்டும். இல்லை என்றால் ராகுல் டிராவிட், கேரி கிறிஸ்டன் போன்ற பயிற்சியாளராக செயல்பட வேண்டும்.
இந்த பயிற்சியாளர்கள் அனைவரும் வீரர்களை எப்போதுமே ஊடகங்களின் வெளிச்சத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் கிரேக் சேப்பல் நடந்து கொண்ட இடம் இந்தியாவுக்கு சற்றும் உதவாது. கம்பீர் ஒன்று ரவி சாஸ்திரி அல்லது டிராவிட் வழியில் வீரர்களை நடத்த வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ளார். கம்பீர் பயிற்சியாளராக தலைமையேற்ற பிறகு இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் ஆறிலும், இலங்கைக்கு எதிராக ஒரு நாள் தொடரிலும் தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.