சென்னை : இந்திய அணி நீண்ட நெடும் டெஸ்ட் பயணத்திற்கு வரும் வியாழக்கிழமை முதல் தயாராகி வருகிறது. வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் என அடுத்த ஐந்து மாதத்தில் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் குறைந்தபட்சம் ஐந்து வெற்றியை நாம் பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நம்மால் தகுதி பெற முடியும். இந்த சூழலில் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றிருக்கும் கம்பீர்,விராட் கோலி உடன் நடத்திய உரையாடலில் பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசி இருக்கிறார்கள்.

இதில் பேசிய விராட் கோலி பல இளைஞர்கள் என்னிடம் ரன்களை எப்படி சேஸ் செய்கிறீர்கள்? வெற்றிகரமாக இலக்கை எப்படி சேஸ் செய்வது என்று கேட்கிறார்கள். அவர்களிடம் நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான். அணியின் வெற்றிக்கு என்ன வேண்டுமோ அதை முதலில் நாம் செய்ய வேண்டும். முதலில் எனக்கு அணியின் வெற்றி தான் முக்கியம்.
அணி வெற்றி பெற நான் அதிரடியாக ஆட வேண்டும் என்றால் கண்டிப்பாக நான் அதிரடியாக விளையாடுவேன். இல்லை ஓடி ரன்கள் சேர்க்க வேண்டும் என்றால் நான் ஓடியே நான் சேர்த்து அணியை வெற்றி பெற வைப்பேன். இல்லை பெரிய ஷாட் ஆடாமல் பந்தை கீழே அடித்து ஆட வேண்டும் என்றால் அதையும் நான் செய்வேன். இல்லை மூன்று மணி நேரம் அமைதியாக நின்று விளையாட வேண்டும் என்ற நிலை இருந்தால் அதையும் நான் செய்வேன்.
எனவே சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டும். இதை தான் ரன் சேஸில் என்னுடைய திட்டமாக இருக்கும். உங்களுடைய ரன் சேஸ் குறித்து சொல்லுங்கள் என்று கம்பீரிடம் கோலி கேட்டார். இதற்கு பதில் அளித்த கம்பீர், இதே போல் என்னிடம் ஒரு இளைஞர் வந்து கேட்டால் நிச்சயம் நான் அணியின் வெற்றிக்காக விளையாட வேண்டும் என்று தான் கூறுவேன். இலக்கை நாம் துரத்தும் போது நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று சரியாக தெரிந்து விடும்.
நமது இலக்கு என்ன? வெற்றி பெற எந்த இலக்கை தொட வேண்டும் என்பது நம் கண் முன்னே தெரியும். எனவே அதற்கு ஏற்றார் போல் விளையாட வேண்டும். அணியின் வெற்றி தான் முக்கியம் என்பதை தவிர தனிப்பட்ட மைல்கல்லுக்காக விளையாட கூடாது. உதாரணத்துக்கு 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் நான் ஏன் ஒரு தேவையில்லாத ஷாட் ஆடி சதத்தை மிஸ் செய்தேன் என்று பலரும் கேள்வி கேட்டார்கள்.
ஆனால் எனக்கு சதத்தை நான் மிஸ் செய்தது குறித்து எந்த கவலையும் இல்லை. நான் 97 ரன்கள் இருந்தபோது சதம் அடிக்க வேண்டும், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற வேண்டும். சதம் அடித்து விட்டு எப்படி கொண்டாடலாம் என்பது குறித்து எல்லாம் யோசிக்கவே இல்லை. எனக்கு முக்கியம் அணியின் வெற்றி. அதற்காக தான் நான் விளையாடுகின்றேன்.நான் இறுதி போட்டியில் ஆட்டம் இழந்த போது சதம் அடிக்கவில்லை என்று கவலை எனக்கு கொஞ்சம் கூட இல்லை.
முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்து விட்டோமே, நாம் அவுட்டான பிறகு எதிரணி ஆட்டத்திற்குள் மீண்டு வர நாமே வழியை ஏற்படுத்திக் கொடுத்து விட்டோமே என்று தான் கவலைப்பட்டேன். ஒருவேளை அந்த ஆட்டத்தில் நான் ஆட்டமிழந்த உடன் எதிரணி ஆதிக்கம் செலுத்த தொடங்கினால் நிச்சயம் அதனால் ஏற்பட்டிருக்கும் வலி நிச்சயம் எனக்கு தீராது. எனவே அணிக்காக இளைஞர்கள் விளையாட வேண்டும். இனிவரும் தலைமுறையினர் தனிப்பட்ட சாதனைகளை மறந்து விட வேண்டும். அணிக்குத் தேவையானதை செய்யுங்கள் என்று கம்பீர் விராட் கோலி முகத்திற்கு நேராக கூறினார்.