கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி, தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை "இரட்டை வேடம் போடுபவர்" என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார். பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது, மற்றும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து, கம்பீரின் முந்தைய கருத்துக்களை சுட்டிக்காட்டி மனோஜ் திவாரி இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.
கௌதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியை ஏற்கும் முன்பு பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் ஆடுவது குறித்தும், ஜெய்ஸ்வாலுக்கு டி20 அணியில் வாய்ப்பு கொடுப்பது பற்றி பேசியது குறித்தும் சுட்டிக் காட்டி அவர் ஏன் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என கேள்வி எழுப்பி உள்ளார்.

மனோஜ் திவாரி தனது சமீபத்திய பேட்டியில், "கம்பீர் ஒரு இரட்டை வேடம் போடுபவர் என்பதை நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். எல்லை தாண்டிய பயங்கரவாதம் நிற்கும்வரை இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடவே கூடாது என்று இந்திய அணியின் பயிற்சியாளராக இல்லாதபோது அவர்தான் ஆணித்தரமாக கூறியிருந்தார். ஆனால் இப்போது என்ன செய்யப்போகிறார்? அவரே பயிற்சியாளராக இருக்கும் அணிதான் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொள்ளப் போகிறது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "பாகிஸ்தானுடன் விளையாடுவதால், நான் இந்திய அணியின் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன் என்று கூறி, அவர் ஏன் தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது?" என்றும் மனோஜ் திவாரி ஆவேசமாக சவால் விடுத்துள்ளார்.
சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், மனோஜ் திவாரியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 வீரர்கள் கொண்ட அணியில் சேர்க்கப்படாமல், ரிசர்வ் வீரராக மட்டுமே அறிவிக்கப்பட்டார். இதையும் சுட்டிக்காட்டி கம்பீரை விமர்சித்துள்ளார் மனோஜ் திவாரி.
"யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் எதிர்காலம் என்றும், அவரை டி20 அணியை விட்டு வெளியே வைக்கவே கூடாது, அவருக்கு நீண்ட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கம்பீர்தான் முன்பு கூறியிருந்தார். ஆனால் இப்போது அவர் பயிற்சியாளராக வந்த பிறகு என்ன நடந்தது? ஜெய்ஸ்வால் அணியில் இல்லை" என்று திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.
முன்பு பேசியதற்கும், இப்போது பயிற்சியாளராக ஆன பிறகு செய்வதற்கும் முற்றிலும் நேர்மாறாக இருப்பதால், கம்பீர் ஒரு இரட்டை வேடம் போடுபவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
கௌதம் கம்பீருக்கும், மனோஜ் திவாரிக்கும் இடையே ரஞ்சி டிராபி போட்டி ஒன்றில் ஏற்பட்ட மோதல் அனைவரும் அறிந்ததே. அந்தப் பழைய பகை தற்போதும் தொடர்வதையே மனோஜ் திவாரியின் இந்தக் காட்டமான விமர்சனங்கள் காட்டுவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.