மும்பை: இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் மோர்னே மோர்கல் பெயரை கவுதம் கம்பீர் பரிந்துரை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மோர்னே மோர்கல், அனைத்து நாடுகளிலும் சிறந்த வீரர் என்ற பெயர் வாங்கியவர்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை கவுதம் கம்பீர் ஏற்கவுள்ளார். இந்த நிலையில் கவுதம் கம்பீருக்கு துணையாக இருக்க போகும் பயிற்சியாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலில் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் தேர்வு செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது. அதேபோல் பவுலிங் பயிற்சியாளராக வினய் குமார் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் தொடரவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் பவுலிங் பயிற்சியாளராக வினய் குமார் பரிந்துரை பிசிசிஐ ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸை கம்பீர் பரிந்துரைத்ததாகவும் தெரிய வந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமனம் செய்வதை பிசிசிஐ தவிர்த்து வந்தது. இதனால் கவுதம் கம்பீர் காலத்திலும் அதே நடைமுறையை பின்பற்ற பிசிசிஐ தீவிரமாக உள்ளது. இதனால் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் பரிந்துரையை கவுதம் கம்பீர் கைவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் மோர்னே மோர்கலை கொண்டு வர கவுதம் கம்பீர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் பணியாற்றிய போது, அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டவர் மோர்னே மோர்கல்.
இவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருப்பதால், கவுதம் கம்பீரின் இந்த பரிந்துரை குறித்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பவுலிங் பயிற்சியாளர்களுக்கான போட்டியில் தமிழக முன்னாள் வீரர் பாலாஜி, இந்திய ஜாம்பவான் ஜாகீர் கான் ஆகியோர் உள்ள நிலையில், மோர்னே மோர்கலும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.