மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவர் துணைப் பயிற்சியாளராக மூன்று பேரை குறித்து வைத்துள்ளதாகவும் அவர்களை இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக கொண்டுவர முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதில் மிகவும் முக்கியமானவர் அபிஷேக் நாயர். இவர் இந்திய அணிக்காக சில போட்டிகளில் ஆடி உள்ளார். பின்னர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடி பேட்ஸ்மேன் ஆக இருந்தார். அதன் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் தடுமாறி வந்தபோது, அவரை ஒரு முழு நேர ஃபினிஷராக மாற்றிய பெருமை அபிஷேக் நாயரையே சேரும். அதேபோல தற்போது இந்திய அணியின் புதிய பினிஷராக உருவாகி இருக்கும் ரிங்கு சிங்கை பட்டை தீட்டியவரும் அபிஷேக் நாயர் தான்.

அதேபோல, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பல இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு இவரே முக்கிய காரணம். அந்த வகையில் அபிஷேக் நாயர், இந்திய அணியுடன் பயணம் செய்தால் அது சிறப்பாக இருக்கும் எனக்கு கவுதம் கம்பீர் கருதுகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்த போது அபிஷேக் நாயரிடம் இது குறித்து பேசி விட்டதாகவும், அபிஷேக் நாயரும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம் கம்பீரின் கேப்டன்சியில் பந்து வீச்சாளராக இருந்த வினய்குமாரை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்போது பல்வேறு டி20 தொடர்களில் ஃபிரான்சைஸ் அணிகளின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
அடுத்து இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ்-ஐ நியமிக்க கவுதம் கம்பீர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்த போது ஜான்டி ரோட்ஸ்-ஐ அவர் பீல்டிங் பயிற்சியாளராக கொண்டு வந்தார். தற்போது அவரை இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கவும் கம்பீர் திட்டமிட்டு இருக்கிறார். அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் விஜய் தாஹியாவை இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம் பெறச் செய்யவும் கவுதம் கம்பீர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.