டெல்லி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி தேர்வின்போது, ஓப்பனிங் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்று பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் ஆட உள்ள 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

சந்தீப்பட்டீல் தலைமையிலான தேர்வு குழு டெல்லியில் கூடி வீரர்களை தேர்வு செய்தது. அணி வீரர்கள் விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவான், கேஎல் ராகுல், செடேஸ்வர் பூஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோகித் ஷர்மா, விருதிமான் சாகா (விக்கெட் கீப்பர்), ஹர்பஜன்சிங், புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, ஆர்.அஸ்வின், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன்.
இதன்பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு சந்தீப் பாட்டில் பதிலளித்து கூறியதாவது: முகமது ஷமி மற்றும் கரன் ஷர்மா ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை என்பதால், தேர்வுக்காக அவர்கள் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.
இலங்கையின் ஆடுகளங்களுக்கு ஏற்ப பந்து வீச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இலங்கை லெக் ஸ்பின்களில் திணறுவதை வைத்தே, அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மற்றொரு ஸ்பின்னர் ஓஜா பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், 15 பேரைத்தான் தேர்வு செய்ய முடியும் என்பதால், ஓஜாவை தேர்ந்தெடுக்க முடியவில்லை.
ஹர்பஜனின் பந்து வீச்சில் மகிழ்ச்சியடைந்துள்ளோம். அஸ்வின் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோருடன் இணைந்து, ஹர்பஜன் சிறப்பான பந்து வீச்சை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம். வீரர்களின் உடல்தகுதிக்குதான் தர நிர்ணயம் வைத்துள்ளோம். வீரர்களுக்கு அவர்களிடம் பிசிசிஐ என்ன எதிர்பார்க்கிறது என்பது நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
வயதை பற்றி கவலைப்படாமல், சிறந்த வீரர்களை தேர்ந்தெடுப்பதில்தான் பிசிசிஐ கவனம் வைத்துள்ளது. கேப்டன் மாறுவதால், வீரர்கள் தேர்விலும் கண்டிப்பாக மாற்றம் இருக்கத்தான் செய்யும். இவ்வாறு சந்தீப் பாட்டீல் தெரிவித்தார்.