மும்பை: 2026 டி20 உலகக் கோப்பையை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெல்லத் தவறினால், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை பிசிசிஐ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து ஒருநாள் தொடர் தோல்வி, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிர்ச்சி முடிவுகள் போன்ற காரணங்களால் கம்பீர் ஏற்கெனவே கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
இது குறித்து பேசிய மனோஜ் திவாரி, “கவுதம் கம்பீர் 2026 டி20 உலகக் கோப்பையை வெல்லத் தவறினால், பிசிசிஐ ஒரு பெரிய மற்றும் கடினமான முடிவை எடுக்க வேண்டும். கம்பீரின் ஒப்பந்தம் முடியும் வரை தான் நாங்கள் அவருடன் பயணிப்போம் என்று பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார்.

ஆனால், 2026 டி20 உலகக் கோப்பை கம்பீருக்கு நல்ல முடிவைத் தரவில்லை என்றால், பிசிசிஐ அவரை நீக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார். பிசிசிஐ கம்பீரை நீக்க முடிவு செய்தால், தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) கிரிக்கெட் தலைவர் விவிஎஸ் லட்சுமணன் சிறந்த மாற்று ஆவார் என திவாரி கூறினார். அவர் ராகுல் டிராவிட் இல்லாதபோது பயிற்சியாளராகப் பணியாற்றி, நல்ல வெற்றி விகிதத்தைக் கொண்டவர்.
லட்சுமணன் குறித்துப் பேசிய திவாரி, “இது ஒரு செயல்முறை சார்ந்த விஷயமாக இருக்க வேண்டும். ராகுல் டிராவிட் இந்தியப் பயிற்சியாளராக இருந்தபோது, அவர் எந்தத் தொடரையும் தவறவிட்டால், இயல்பான தேர்வு விவிஎஸ் லட்சுமணன் தான். என் கருத்துப்படி, பிசிசிஐ அவரை சம்மதிக்க வைக்க வேண்டும், ஏனெனில் அவர் ஒரு சீரான மனநிலை கொண்டவர் மற்றும் மிக நல்ல மனிதராகவும் இருக்கிறார். அவருக்குப் பயிற்சி அனுபவமும் உள்ளது” என்று வலியுறுத்தினார்.
இதனால், கம்பீருக்கு டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் ஒரு கடைசி வாய்ப்பாக இருக்கும். இதே போன்று ஒரு சூழலை, கம்பீர் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததால் கடும் அழுத்தத்தை சந்தித்தார். அப்போது 2025 சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கம்பீர் விமர்சனத்துக்கு பதிலடி தந்தார். தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட், நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்த நிலையில், தற்போது டி20 உலககோப்பை தொடர் நடைபெறுகிறது.