மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கும் மூத்த வீரரான விராட் கோலி இடத்தை நிரப்பப் போவதே புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் கூறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் இந்திய அணி வீரர்கள் மத்தியில் தனது ஆக்ரோஷமான குணத்தை கடத்துவார் எனவும், இதுவரை விராட் கோலி ஆக்ரோஷமாக இருந்து இந்திய வீரர்கள் மத்தியிலும் அதை கடத்தி வந்த நிலையில், கோலி இனி அதிக போட்டிகளில் ஆடமாட்டார் என்ற நிலையில் கம்பீர் அதை செய்வார் என சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதுகுறித்து ஸ்டெய்ன் பேசுகையில், "நான் கவுதம் கம்பீரின் தீவிர ரசிகன். அவரது ஆக்ரோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ஆடிய இந்திய வீரர்களிலேயே நம்மை எதிர்த்து ஆடக்கூடிய சிலரில் இவரும் ஒருவர். அதை நான் விரும்புகிறேன். இனி இந்திய அணிவீரர்கள் மத்தியில் அந்த ஆக்ரோஷத்தை கவுதம் கம்பீர் கொண்டு செல்ல இருக்கிறார்." என்றார்.
விராட் கோலி இந்திய அணியின் கேப்டனான பின் அவரது ஆக்ரோஷமான குணம் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு பெரிய ஊக்கமாக இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்திய அணி அந்த காலகட்டத்தில் டெஸ்ட் தொடர்களில் அதிக வெற்றிகளை குவித்ததாகவும் முன்னாள் வீரர்கள் பலர் சுட்டிக் காட்டி உள்ளனர். விராட் கோலி இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கி விட்ட நிலையில், இனி கவுதம் கம்பீர் தனது ஆக்ரோஷ குணத்தால் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பார் என டேல் ஸ்டெய்ன் கூறி இருக்கிறார்.
மேலும், "மூத்த வீரரான விராட் கோலி போன்றோர் இனி அதிகம் போட்டிகளில் பங்குபெற மாட்டார்கள். நான் இதை உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால், இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலான கிரிக்கெட்டிலும் இதுபோன்ற ஆக்ரோஷமான நபர்கள்தான் நமக்கு தேவை." என்றார் டேல் ஸ்டெய்ன்.
மேலும், கவுதம் கம்பீர் எப்படிப்பட்ட பயிற்சியாளராக இருப்பார் என டேல் ஸ்டெய்ன் கூறினார். "நாங்கள் பல்வேறு லீக் தொடர்களில் எதிரெதிர் அணிகளில் ஆடி இருக்கிறோம். அவர் நல்ல கிரிக்கெட் அறிவை கொண்டவர். கிரிக்கெட் குறித்து நன்கு சிந்திக்க கூடியவர். அதன் அடிப்படையில் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன்" என்றார்.