பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பை வென்றதை பெரிய விழாவாக கொண்டாட நினைத்து, அது துயர சம்பவமாக மாறி இருக்கிறது. 11 பேர் உயிரிழந்துள்ளனர்; 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 11 ஆண்டுகளுக்கு முன்பே "இனி இப்படி ஒரு வெற்றி விழா நடத்த வேண்டிய அவசியமே இல்லை, அதில் நான் பங்கேற்கப் போவதில்லை" என கௌதம் கம்பீர் கூறியிருந்தார். அந்தத் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
2014 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றிருந்தது. அப்போது அந்த அணியின் கேப்டனாக கௌதம் கம்பீர் இருந்தார். அந்த வெற்றியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கொண்டாட நினைத்தது. ஈடன் கார்டன் மைதானத்தில் வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதும் இது போன்ற கூட்ட நெரிசல் சம்பவங்கள் ஏற்பட்டன; காவல்துறை தடியடி நடத்தியது. ஆனால், வேறு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

எனினும், கௌதம் கம்பீர் அந்த சம்பவம் குறித்து பத்திரிகை ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் "ரசிகர்கள் மீது தடியடி நடத்தியது தனக்கு மிகவும் வருத்தத்தை அளித்ததாகவும், இனிமேல் தான் இது போன்ற விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை" எனவும் அறிவித்திருந்தார்.
அந்தப் பதிவு இங்கே: "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி விழாவில் கொல்கத்தா மக்களுக்கு ஏற்பட்ட தொந்தரவு குறித்து நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்."
"இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட்டின் நல விரும்பிகள் ஆவார்கள். அவர்கள் அங்கே சரியாக நடத்தப்படவில்லை. இந்த விஷயத்தை மேலும் மோசமாக்கும் வகையில் அப்பாவிகள் மீது காவல்துறை தடியடி நடத்தப்பட்டது. எனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்னும் நிறைய கோப்பைகளை வெல்ல வேண்டும். ஆனால், என்னைப் பொறுத்தவரை இனி எந்த வெற்றி விழாவிலும் நான் பங்கேற்க மாட்டேன்," என்று கூறியிருந்தார் கௌதம் கம்பீர்.
அந்த உதாரணத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து மிகவும் கவனமாக இந்த விழாவை நடத்தி இருக்க வேண்டும் அல்லது இந்த விழாவை சிறிய அளவில் நடத்தி இருக்க வேண்டும். அனைத்து ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்து பிரம்மாண்டமான முறையில் நடத்த முயற்சி செய்து, மிகப்பெரிய துயர சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.