மும்பை: 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து இருந்தன. வெளியே இருந்து பார்ப்பதற்கு இது ஒரு சாதாரண முடிவாகத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் தேர்வுக்குழுவில் நடந்த பெரிய விவாதங்களும், பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் தலையீடும் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், ஆசியக் கோப்பைக்கான அணியை அறிவிக்கும்போது, முதல் பெயராக சுப்மன் கில்லின் பெயரைச் சொல்லி 'துணை கேப்டன்' என்று குறிப்பிட்டார். ஆனால், தேர்வுக்குழு கூட்டத்தில் அகர்கரின் முதல் தேர்வாக கில் இல்லை என்பதுதான் ஆச்சரியமான தகவல். அக்சர் படேல் போன்ற வீரர்களின் பெயர்களும் துணை கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செவ்வாயன்று நடந்த இந்த தேர்வுக்குழு கூட்டத்தில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வீடியோ கால் வாயிலாக இணைந்து கொண்டார். கூட்டத்தில் துணை கேப்டன் பதவி குறித்து நீண்ட விவாதம் நடந்தபோது, கம்பீரின் கருத்து ஆட்டத்தையே மாற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இளம் வீரர் ஒருவரை தலைமைப் பொறுப்புக்கு தயார்படுத்த வேண்டும் என்று கம்பீர் வலுவாக வாதிட்டதாக தெரிகிறது. கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு 35 வயதை நெருங்குவதால், நீண்ட கால நோக்கில் ஒரு தலைவரை அடையாளம் கண்டு வளர்க்க வேண்டியதன் அவசியத்தை கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.
25 வயதான சுப்மன் கில், ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பதால், டி20 அணிக்கும் அவரை கேப்டனாக தயார்படுத்துவதே சரியான முடிவாக இருக்கும் என்பது பயிற்சியாளர் கம்பீரின் நிலைப்பாடாக இருந்துள்ளது.
கம்பீரின் கருத்தை ஏற்ற தேர்வுக்குழு, சுப்மன் கில்லை நீண்ட கால முதலீடாகக் கருதி, அவருக்கு துணை கேப்டன் பொறுப்பை வழங்க இறுதியில் ஒப்புக்கொண்டது. "அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பொறுப்பை ஒப்படைக்க, சுப்மன் கில்லை விட சிறந்த வேட்பாளரை தேர்வுக்குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று கூறப்படுகிறது.
தேர்வுக்குழு கூட்டத்தில் இவ்வளவு விவாதங்கள் நடந்தாலும், செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமார் யாதவும், அகர்கரும் சுப்மன் கில் எப்போதுமே அணியின் ஒரு அங்கம்தான் என்பது போல பேசினர். கடந்த ஆண்டு ஜூலை முதல் டி20 போட்டிகளில் விளையாடாத போதிலும், சுப்மன் கில் அணியின் திட்டங்களில் எப்போதும் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அஜித் அகர்கர் பேசுகையில், "சுப்மன் கில்லிடம் சில தலைமைப் பண்புகளை நாங்கள் காண்கிறோம். இங்கிலாந்தில் கேப்டனாக இருந்த அழுத்தத்திலும் அவர் தனது பேட்டிங்கில் வெளிப்படுத்திய ஃபார்ம், எங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் தாண்டிவிட்டது" என்று கூறினார்.
மொத்தத்தில், சுப்மன் கில்லின் துணை கேப்டன் நியமனம் என்பது, கௌதம் கம்பீரின் தொலைநோக்கு பார்வையும், இந்திய அணியின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் ஒரு பெரிய திட்டத்தின் முதல் படி என்பது தெளிவாகிறது. அதற்காக ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல் போன்ற பல வீரர்கள் தங்கள் வாய்ப்பை, பதவியை பறிகொடுத்து உள்ளனர்.