மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை நெருங்கி வரும் வேளையில், இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளே புகைந்து கொண்டிருந்த ஒரு விவகாரம் தற்போது வெளியே வந்துள்ளது. இந்திய டி20 அணியின் வருங்கால கேப்டனாகக் கருதப்பட்ட சுப்மன் கில் 2026 டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது, மற்ற வீரர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதன் பின்னணியில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த 'சூப்பர் ஸ்டார்' என்றும், வருங்கால அனைத்து ஃபார்மேட் கேப்டன் என்றும் போற்றப்பட்டவர் சுப்மன் கில். ஆனால், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரது பெயர் இல்லை. ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாகவும், டி20 அணிக்குத் துணை கேப்டனாகவும் இருந்த ஒருவரை, இப்படி அதிரடியாக உலகக் கோப்பை அணியிலிருந்து தூக்கியெறிய முடியும் என்றால், சாதாரண வீரர்களின் நிலைமை என்ன? என்ற கேள்விதான் இப்போது இந்திய வீரர்கள் மத்தியில் எதிரொலிக்கிறது.

பிடிஐ (PTI) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுப்மன் கில்லின் இந்த நீக்கத்திற்குப் பின்னால் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் தனிப்பட்ட முடிவு இருப்பதாகக் கூறப்படுகிறது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது, வீரர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்தது. ஒரு வீரர் சொதப்பினாலும், அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால், கம்பீரின் 'ஆட்சியில்", யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்ற பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விராட் கோலி, ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட்டின் புதிய அடையாளமாக வலம் வந்த சுப்மன் கில்லுக்கே உலகக்கோப்பை அணியில் இடமில்லை எனும் போது, அடுத்த குறி நம் மீதுதான் இருக்கும் என வீரர்கள் அஞ்சுகின்றனர். இதனால் அணியில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மையும் நிலவுகிறது என்று அந்தத் தகவல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
சுப்மன் கில் திறமையானவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், புள்ளிவிவரங்கள் அவருக்கு எதிராகவே உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் டி20 அணிக்குள் கொண்டுவரப்பட்ட கில், துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதற்காக சஞ்சு சாம்சன் போன்ற ஃபார்மில் இருந்த வீரர்கள் வெளியே அமர வைக்கப்பட்டனர்.
ஆனால், தனக்குக் கிடைத்த 15 இன்னிங்ஸ்களில் கில் வெறும் 291 ரன்களை மட்டுமே எடுத்தார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் 4, 0, 28 என படுமோசமாகச் சொதப்பினார். இதன் காரணமாகவே, தேர்வுக்குழு பொறுமை இழந்து, மீண்டும் சஞ்சு சாம்சனை டாப் ஆர்டருக்குக் கொண்டு வந்துள்ளது.
மறுபுறம், பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் இது வாழ்வா? சாவா? போராட்டம் தான். அவர் தலைமையில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பையை வென்றிருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் இரண்டு முறை 'ஒயிட் வாஷ்' ஆனது பெரும் கரும்புள்ளியாக மாறியுள்ளது.
இன்னும் 6 வாரங்களில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பையில் இந்தியா சொதப்பினால், கம்பீரின் பதவிக்கு ஆபத்து நிச்சயம். டெஸ்ட் மற்றும் ஒருநாள்/டி20 எனத் தனித்தனிப் பயிற்சியாளர்களை நியமிப்பது குறித்து பிசிசிஐ யோசிக்கக்கூடும்.